கன்யா குமார் விவகாரத்தின் பின்னணியில் இருந்தவர் யார் தெரியுமா?
டெல்லி: ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்பு தலைவர் கன்யா குமார் தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அக்குற்றச்சாட்டுக்கு காரணமாக, கோஷங்களை எழுப்பியது இடதுசாரி கொள்கை தாக்கம் கொண்ட உமர் காலித் என்ற மாணவர் என்பது தெரியவந்துள்ளது.
உமர் காலித்தின் தந்தை தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தில் இருந்தவர் என்பதால், உமர் காலித்துக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளோடு தொடர்புள்ளதாக என்ற கோணத்தில் விசாரணை நடத்திவரும் போலீசார், தலைமறைவாகியுள்ள உமரை தேடி வருகிறார்கள்.
கடந்த 9ம் தேதி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், போஸ்ட் ஆபீஸ் பற்றிய செமினார் நடத்த ஜனநாயக மாணவர் சங்கம் அனுமதி பெற்றிருந்த நிலையில், அதற்கு மாறாக தூக்கு தண்டனைக்கு உள்ளான நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவுக்கு ஆதரவாக கூட்டம் நடந்துள்ளது.
பாக். ஆதரவு
இக்கூட்டத்தில், பாகிஸ்தான் வாழ்க என்ற கோஷம் சில மாணவர்களால் எழுப்பப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான கோஷங்களும் எழுப்பப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக, மாணவர் சங்க தலைவர் கன்யா குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்யாகுமார் கண்டனம்
கன்யா குமார் மீது தேசத்துரோக குற்றச்சாட்டின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் எழுப்பப்பட்ட கோஷத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும், அதை கண்டிப்பதாகவும் கன்யா குமார் கோர்ட்டில் தெரிவித்தார்.
வேறு நபர்
அப்படியானால், இந்த கோஷத்தை முன்னெடுத்தது யார் என்ற கேள்வியை விரட்டிச் சென்ற போலீசாருக்கு கிடைத்த விடைதான் உமர் காலித். ஜனநாயக மாணவர் அமைப்பின் உறுப்பினரான உமர், அப்சல் குரு ஆதரவு நிகழ்ச்சிக்கு மூளையாக இருந்துள்ளார்.
பல்கலை. மாணவர்
28 வயதாகும் உமர், ஜே.என்.யூ பல்கலையில், வரலாற்று படிப்பியலில் பிஹெச்டி படித்து வருகிறார். கன்யா குமார் கைது செய்யப்படும்வரை, டெல்லி பல்கலை.யில் நடந்த நிகழ்வுக்கு ஆதரவு தெரிவித்து பல தொலைக்காட்சி சேனல் விவாதங்களில் பேசி வந்த உமர், அதன்பிறகு திடீரென தலைமறைவாகிவிட்டார்.
தீவிரவாதிகளுடன் தொடர்பா?
உமர் திடீரென தலைமறைவாகியுள்ளதை வைத்து, அவருக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கும் தொடர்பிருக்கலாம் எனவும், பிரிவினை கோஷத்தை மாணவர்கள் மத்தியில் உருவாக்க உமரை தீவிரவாதிகள் பயன்படுத்தியிருக்கலாம் எனவும் மீடியாக்கள் சில செய்தி வெளியிட்டன.
சிமி தொடர்பு
தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான சிமியின், தலைவராக பதவி வகித்தவர் உமர் காலித்தின் தந்தை, இலியாஸ் என்பதும், சந்தேகத்தை தூண்டிவிடுவதாக அமைந்தது. இருப்பினும், தீவிரவாதிகளுடன் உமருக்கு தொடர்பிருக்காது என்பதற்கு பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
காஷ்மீருக்கு தொடர்பில்லை
முதலில், உமருக்கும் காஷ்மீருக்கும் தொடர்பில்லை. அவரது குடும்ப பூர்வீகம் மராட்டிய மாநிலம். 30 வருடங்களுக்கும் மேலாக டெல்லியில்தான் வசிக்கிறார்கள். தீவிர இடதுசாரி கொள்கை கொண்டவர் உமர் என்பதால், இதுபோன்ற பிரிவினைவாத கோஷங்களை அவர் முன்வைத்துள்ளார்.
இஸ்லாமியர் அல்ல
உமர் பிறப்பால் இஸ்லாமியர் என்றாலும், மத கோட்பாடுகளில் நம்பிக்கையில்லாதவர்., நாத்தீகரான அவர் இடதுசாரி சிந்தனையில் தீவிர நம்பிக்கையுள்ளவர். 'கம்யூனிஸ்ட் பாகல்' (கம்யூனிஸ்ட் பைத்தியம்) என்று உமரை அவரது சகோதரி அழைப்பது வழக்கமாம்.
வலைவீச்சு
இடதுசாரி சிந்தனை தாக்கம்தான், அப்சல் குரு ஆதரவு, இந்தியா எதிர்ப்பு போன்ற கோஷங்களை உமர் முன்வைக்க காரணமாக கூறப்படுகிறது. ஆனால் இந்த கோஷங்களுக்கு தொடர்பில்லாத கன்யா குமார் போலீசில் சிக்கியுள்ளார். உமரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.