2ஜி வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் தவறு இருக்கிறது.. நீதிபதி ஓ.பி. சைனி
2ஜி வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் உண்மையில்லை என்று நீதிபதி ஓ.பி. சைனி தனது தீர்ப்பில் தெரிவித்து இருக்கிறார்.
டெல்லி: 2ஜி வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் உண்மையில்லை என்று நீதிபதி ஓ.பி. சைனி தனது தீர்ப்பில் தெரிவித்து இருக்கிறார். பல சாட்சியங்கள் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படவில்லை என்றும் நீதிபதி கூறியுள்ளார்.
2ஜி வழக்கில் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிபதி ஓ.பி. சைனி வழங்கிய தீர்ப்பில் 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
அவர் அளித்த தீர்ப்பில் "ராசா மீதான எந்த தவறும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. சிபிஐ தரப்பு பல முக்கிய சாட்சியங்கள் நீதிமன்றத்திற்கு கொண்டு வரவில்லை'' என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் '' இதில் குற்றப்பத்திரிக்கை ஜோடிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அதை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை. இதுவரை இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பவர்களுக்கு எதிராக மிக முக்கிய ஆதாரம் என்று கூறப்படும் அளவிற்கு எந்த தகவலும் அளிக்கப்படவில்லை'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் முக்கியமாக '' இந்த குற்றப்பத்திரிக்கையில் பொய்யான தகவல்கள் நிறைய கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் காட்டப்பட்டு இருக்கும் கணக்குகளில் எதுவும் சரியாக இல்லை. நுழைவுக்கட்டணம் டிராய் நிறுவனத்தால் மறுஆய்வு செய்யட்டதாக குறிப்பிடப்பட்டு இருப்பது உண்மையில்லை'' என்றும் கூறியுள்ளார்.