மொழிப்பற்றை தமிழர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்: கர்நாடக முதல்வர் புகழாரம்
பெங்களூர்: மொழிப்பற்று குறித்து தமிழர்களிடமிருந்து கன்னடர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரில் இன்று கன்னட வளர்ச்சி ஆணையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
கன்னட மொழி பற்றி, கன்னடர்கள் அலட்சிய மனப்போக்குடனேயே நடந்துகொண்டு வருகிறார்கள். எனவேதான் இப்போது தாய்மொழி மீது பற்று ஏற்படுத்த அரசு முயற்சி செய்ய வேண்டிய நிலை வந்துள்ளது. கன்னடத்துக்கு தனியாக வளர்ச்சி ஆணையம் அமைத்து மொழி வளர்ச்சிக்கு பாடுபடுகிறோம்.
தாய் மொழியை நேசிப்பதில் நாம் தமிழர்களிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழர்கள் தங்களது மொழியை உயிரைவிட உயர்வாக நினைப்பார்கள்.
அவர்களை பார்த்து நாமும் நமது தாய் மொழியை எப்படி கவுரவிக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். பிற மாநில மக்களும்கூட தாய்மொழிக்கு உயரிய கவுரவம் கொடுக்கிறார்கள். கன்னடத்தை ஆட்சி மொழியாக நடைமுறைப்படுத்த நான் கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறேன்.
என்னிடம் வரும் கோப்புகளுக்கு நான் கன்னடத்தில்தான் கையெழுத்திடுகிறேன். ஆங்கிலத்தில் வரும் கோப்புகளை திருப்பியனுப்பிவிடுவேன் என்றார்.