பெங்களூரு குண்டுவெடிப்பில் பலியான சென்னை பெண் குடும்பத்துக்கு ரூ5 லட்சம் நிவாரணம்: சித்தராமையா
பெங்களூரு: பெங்களூருவில் நேற்று இரவு நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியான சென்னை பெண் பவானியின் குடும்பத்துக்கு ரூ5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும் இச்சம்பவத்தில் படுகாயமடைந்த பவானியின் உறவினர்களுக்கு உயர் சிகிச்சை மற்றும் நிவாரண உதவி அளிக்கப்படும் என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு நகரில் மகாத்மா காந்தி சாலை- பிரிகேட் சாலைக்கு அருகே உள்ள மக்கள் கூட்டம் நிறைந்த சர்ச் சாலையில் நேற்று இரவு 8.45 மணியளவில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் படுகாயமடைந்த சென்னையைச் சேர்ந்த பவானி என்ற பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பவானியின் உறவினர்களான கார்த்திக், சந்தீப் மற்றும் வினய் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தின் போது மைசூரில் இருந்த கர்நாடகா முதல்வர் சித்தராமையா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அதிகாலை சம்பவ இடத்தைப் பார்வையிட்ட சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசியதாவது:
ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த மேதி கைதுக்குப் பின்னர் போலீசார் உஷார்படுத்தப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன. இது உளவுத்துறை தோல்வியால் ஏற்பட்ட சம்பவம் என்றெல்லாம் கூற முடியாது. போலீசார் தங்களது பணியை முடிந்த அளவு மிகச் சிறப்பாகவே செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து இன்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த போது நானும் பெங்களூருவில் இல்லை.. உள்துறை அமைச்சர் கூட பெங்களூருவில் இல்லை. தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
இச்சம்பவத்தில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு ரூ5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். படுகாயமடைந்தோருக்கும் நிவாரணத் தொகையும் உயர் சிகிச்சையும் அளிக்கப்படும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
பின்னர் டி.ஜி.பி. மற்றும் பெங்களூரு மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோருடன் சித்தராமையா ஆலோசனை நடத்தினார். முன்னதாக சித்தராமையாவை தொடர்பு கொண்ட உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications