தொழில் சட்டத்திலிருந்து கர்நாடக 'ஐடி'க்கு 5 ஆண்டு விலக்கு- ஸ்டிரைக் நடந்தாலும் வேலை பார்க்கனும்!
பெங்களூர்: கர்நாடக அரசு, தனது தொழில் சட்டத்திலிருந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மேலும் 5 ஆண்டு காலம் விலக்கு அளித்துள்ளது.
இந்த முடிவின் மூலம் கர்நாடகத்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவன முதலாளிகள் நல்ல பலனைப் பெறுவார்கள்.
அதேசமயம், பணியாளர்களுக்கு இது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். காரணம், என்ன சூழல் ஏற்பட்டாலும், ஊரெல்லாம் ஸ்டிரைக்கோ, பந்த்தோ நடந்தாலும் கூட நாம் வேலை பார்த்தாக வேண்டும். குறிப்பாக ஐடி நிறுவன ஊழியர்கள் ஸ்டிரைக் செய்ய முடியாது.
இந்த விலக்கை கடந்த 11 வருடங்களாக அளித்து வருகிறது கர்நாடக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி நன்றி நன்றி
கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அதிபர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கடந்த வாரம்தான் இந்த முடிவை கர்நாடக அமைச்சரவை எடுத்தது.
11 வருடமாக விலக்கு
கர்நாடக அரசின் தொழில் வேலைவாய்ப்பு சட்டம் 1946 என்ற இந்த தொழில் சட்டத்திலிருந்து, கடந்த 11 வருடமாக இந்த விதி விலக்கை கர்நாடக அரசு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட பீதி..
கடந்த மார்ச் மாதம்தான் இந்த சட்டத்தின் கீழ் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களையும் சேர்க்க கர்நாடக அரசு முடிவு செய்தது. இதனால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தன. இந்த நிலையில், தற்போது அந்த முடிவைக் கைவிட்டுள்ள கர்நாடக அரசு விலக்கை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.
செம ஏற்றுமதி...
கர்நாடகத்தில், தகவல் தொழில்நுட்ப வர்த்தகம் மூலம் வரும் 2014 ஆண்டு மார்ச் மாதத்தில் வர்த்தகம், ரூ. 1.5 லட்சம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பாதிப்பு வந்து விடாமல் தடுக்கவே தற்போது விலக்கை நீட்டித்துள்ளது மாநில அரசு.
10 லட்சம் ஐடி ஊழியர்கள்
கர்நாடகத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு பெரும் 'தலை'களுக்கு கர்நாடகமே தலைமையகம்...
நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் டாப்பில் உள்ள இன்போசிஸ் மற்றும் விப்ரோ ஆகியவற்றின் தலைமையகங்கள் பெங்களூரில்தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐபிஎம், எச்பி, டெல், எஸ்.ஏ.பி உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்களும் இங்கு கிளை பரப்பி வியாபித்துள்ளன.
சட்டம் சொல்வது என்ன...
கர்நாடகத்தின் தொழில் சட்டத்தின் கீழ் வரும் நிறுவனங்கள், பல கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். அதாவது வேலைவாய்ப்பு, ஊழியர்களின் பணி நேரம், ஊதியம், வருகைப் பதிவு, வேலையிலிருந்து நீக்குவது போன்றவற்றின் அரசின் சட்டவிதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஆனால் இந்த சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், இவற்றை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பின்பற்றத் தேவையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
யூனியன் அமைக்க முடியாது
இந்த விதி விலக்கால், ஐடி நிறுவன முதலாளிகளுக்குக் கிடைக்கும் பெரிய நிம்மதி என்னவென்றால், தொழிலாளர் யூனியனை ஊழியர்கள் அமைக்க முடியாது என்பதே. அதுவே ஒரு நிறுவனம் தொழில் சட்டத்தீன் கீழ் வந்தால் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் யூனியன் அமைக்க முடிவு செய்தால், அதை நிறுவனம் தடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டிரைக் பண்ண முடியாது
மேலும், ஐடி நிறுவன ஊழியர்கள் ஸ்டிரைக் போன்றவற்றில் ஈடுபட முடியாது.
இப்படி பல விஷயங்களில் தங்களுக்கு இந்த விதி விலக்கு சாதகமாக இருப்பதால் ஐடி நிறுவன அதிபர்கள் இந்த விலக்கை வரவேற்றுள்ளனர்.