ஜெ. வழக்கில் அப்பீல்... 21ம் தேதி முடிவெடுக்கிறது கர்நாடகா?
பெங்களூரு: ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு அப்பீல் செய்வது தொடர்பாக மே 21ம் தேதி முடிவெடுக்கும் என்று கருதப்படுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கீழ் கோர்ட் விதித்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்திருந்தனர்.
இந்த அப்பீல் மனுக்களை விசாரித்த நீதிபதி குமாரசாமி, நான்கு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் அபராதத்தையும் தள்ளுபடி செய்தார். இது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
ஆனால் நீதிபதி குமாரசாமி சாதாரண கூட்டல் கழித்தல் பெருக்கலில் செய்த மிகப் பெரிய தவறு அடுத்த நாளே வெளிச்சத்திற்கு வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது குழப்பமான தீர்ப்பும் பல்லைக் காட்டி விட்டது. தப்புக் கணக்கின் அடிப்படையில் அவர் ஜெயலலிதாவை விடுவித்தது உள்ளங்கை நெல்லிக் கனியாக தெரிந்தது.
இதையடுத்து நீதிபதி குமாரசாமி தீர்ப்புக்கு எதிர்ப்புகள் வலுத்தன. அதிமுக, பாஜகவைத் தவிர அத்தனை கட்சிகளும் இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. ஆனால் கர்நாடக அரசு மிக மிக நிதானமாக செயல்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் அப்பீல் செய்யலாம் என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யாவும் ஓகே சொல்லி விட்டார். இருப்பினும் முடிவெடுக்காமல் உள்ளது. இந்த நிலையில் 21ம் தேதி கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அன்று இந்த விவகாரத்தில் முடிவெடுக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.
பதவியேற்புக்கு முன்பு ஜெ.வை. அப்செட்டாக்கத் திட்டம்?
மே 22ம் தேதியன்றுதான் அதி்முக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அன்று புதிய முதல்வராக ஜெயலலிதாவை அதிமுக எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 23ம் தேதி ஜெயலலிதா பதவியேற்பார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் 21ம் தேதி ஜெயலலிதா தீர்ப்புக்கு எதிராக அப்பீல் செய்து அவரை அப்செட்டாக்க கர்நாடக அரச முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.