குரங்கணி தீ விபத்து எதிரொலி... சுற்றுலாப் பயணிகள் வனப்பகுதிக்கு செல்ல கேரளா தடை!
குரங்கணி மலைப்பகுதியல் ஏற்பட்ட தீ விபத்தின் எதிரொலியாக கேரள வனப்பகுதிக்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் : குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தின் எதிரொலியாக கேரள வனப்பகுதிக்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் நேற்று ஏற்பட்ட காட்டுத் தீயானது 9 பேரின் உயிரை காவு வாங்கியுள்ளது. காட்டுப்பகுதிகளில் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட தீயில் மலையேற்றத்திற்காக சென்றவர்கள் சிக்கினர்.
சென்னையில் இருந்து சென்ற குழுவைச் சேர்ந்த 27 பேரில் 7 பேரும், ஈரோட்டில் இருந்து மலையேற்றத்திற்கு வந்தவர்களின் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேரும் உயிரிழந்தனர் மேலும் பலர் 40 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வார இறுதிநாளை இயற்கையோடு கொண்டாட சென்றவர்களுக்கு ஏற்பட்ட இந்த துயர சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயின் காரணமாக கேரள வனப்பகுதிக்குள் சுற்றுலா செல்ல அந்த மாநில அரசு தடை விதித்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வனத்துறையின் அனுமதிபெற்ற இடத்திலும் கூட சுற்றுலா செல்ல வேண்டாம் என்று அந்த மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.