தமிழருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த டாக்டர்கள் மீது நடவடிக்கையா.. கேரள டாக்டர்கள் கடும் எதிர்ப்பு!
திருவனந்தபுரம்: கொல்லத்தில் சாலை விபத்தில் சிகிச்சை கிடைக்காமல் தமிழக இளைஞர் இறந்த சம்பவத்தில் தொடர்புடைய டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் ஸ்டிரைக் செய்வோம் என கேரள மருத்துவர்கள் சங்கம் போக்கொடி தூக்கி உள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் சமூகரெங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கொல்லத்தில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். இவருக்கு கொல்லத்தில் நான்கு தனியார் மருத்துவமனைகள் மற்றும் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு காரணங்களை கூறி சிகிச்சை அளிக்க மறுத்தனர்.
இதனால் சுமார் 7 மணி நேரமாக ஆம்புலன்சில் இருந்த அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்த கேரள சுகாதார துறை இயக்குனர் சரிதாவுக்கு கேரள அரசு உத்தரவிட்டது. விசாரணையில் திருவனந்தபுரம் மருத்துவமனையில் முருகனை அனுமதித்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்றும் அங்கு அப்போது பணியில் இருந்த இரண்டு மருத்துவர்களின் அலட்சியம் தான் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்த டாக்டர்களை சில தினங்களில் போலீசார் கைது செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இதற்கு கேரள அரசு மருத்துவ கல்லூரி டாக்டர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மருத்துவர்களை கைது செய்தால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அரசுக்கு மருத்துவர் சங்கம் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. டாக்டர்கள் சங்கத்தின் இந்த முடிவு கேரளாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.