பாலியல் புகார் கூறிய கன்னியாஸ்திரி விபச்சாரிதான்.. வருத்தம் தெரிவிக்க முடியாது.. எம்எல்ஏ அடாவடி!
பாலியல் புகார் கூறிய கன்னியாஸ்திரியை பாலியல் தொழிலாளி என்றதற்கு மன்னிப்பு கேட்கபோவதில்லை என கேரள எம்எல்ஏ ஜார்ஜ் பிடிவாதமாக உள்ளார்.
திருவனந்தபுரம்: பாலியல் புகார் கூறிய கன்னியாஸ்திரியை பாலியல் தொழிலாளி என்றதற்கு மன்னிப்பு கேட்கபோவதில்லை என கேரள எம்எல்ஏ ஜார்ஜ் பிடிவாதமாக உள்ளார்.
கோட்டயம் குருவிளங்காட்டில் உள்ள தேவாலயம் ஒன்றில் கன்னியாஸ்திரியை பாதிரியார் பிராங்கோ கடந்த 2014 முதல் 2016-ம் ஆண்டுவரையிலான காலங்களில் பலமுறை பலாத்காரம் செய்தார் என்று புகார் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து வாடிகன் திருச்சபைக்கும் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி கடிதம் எழுதியுள்ளார்.
கேரள எம்எல்ஏ
இந்நிலையில் பூஞ்சார் தொகுதி சுயேட்சை எம்எல்ஏ பி.சி. ஜார்ஜ் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கன்னியாஸ்திரி குறித்து மோசமான கருத்துக்களை அவர் தெரிவித்தார்.
ஏன் முதலில் கூறவில்லை
அவர் பேசியதாவது, கன்னியாஸ்திரி பாலியல் தொழிலாளி என்பதில் ஏதும் சந்தேகம் உள்ளதா? 12 முறை பாதிரியார் பலாத்காரம் செய்தார் என்று கன்னியாஸ்திரி புகாரில் தெரிவித்துள்ளார், ஏன் முதல் முறை பலாத்காரம் செய்யப்பட்டவுடன் தெரிவிக்காமல் தாமதமாக கூறுகிறார்.
மகளிர் ஆணையம் கண்டனம்
பாலியல் புகார் கூறிய கன்னியாஸ்திரி ஒரு பாலியல் தொழிலாளி என்று விமர்சனம் செய்தார் பி.சி. ஜார்ஜ்.
எம்எல்ஏவின் இந்த மோசமான விமர்சனத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்தது.
மன்னிப்பு கேட்கமுடியாது
பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜார்ஜ், பாலியல் தொழிலாளி என்றது கோபத்தில் பேசியவார்த்தையாகும், பாலியல் தொழிலாளி என்று கூறியதற்கு மன்னிப்பு கேட்கப்போவது கிடையாது என கூறியுள்ளார்.
நிலையாக உள்ளேன்
என்னை பொறுத்தவரையில் அவர் கன்னியாஸ்திரி கிடையாது. எந்தஒரு பெண்ணையும் பாலியல் தொழிலாளி என்பது தவறானது. இதுபோன்ற வார்த்தைகளை இனி பயன்படுத்த மாட்டேன். ஆனால் அந்த பெண் குறித்து நான் வெளியிட்ட கருத்துக்களில் நான் நிலையாக உள்ளேன், வருத்தம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு ஜார்ஜ் கூறியுள்ளார்.