வடகொரியா: ஆடையின்றி அடைத்து வைத்து... 120 நாய்களை விட்டு மாமாவை கொன்ற அதிபர்
சியோல்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் யுன், தனது மாமா மற்றும் அவரது உதவியாளர்கள் 6 பேரின் ஆடைகளை களைந்து நாய்களை விட்டு கடிக்கச் செய்து கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகளுடன் அமர்ந்து வட கொரிய அதிபர் நேரடியாக பார்த்து ரசித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிம் ஜாங் யுன்னின் மாமாவான ஜாங் சாங் தேக் (67), அந்நாட்டு அரசில் அதிபருக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் அதிகாரம் மிக்கவராக செயல்பட்டார்.
இந்த நிலையில் இவர் ராணுவ புரட்சி மூலம் அதிபர் கிம் ஜாங் யுன்னிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற சதி திட்டம் தீட்டினார். இதை அறிந்த அதிபர் அவரையும், அவரது உதவியாளர்கள் 5 பேரையும் கைது செய்தார்.
அவர்கள் மீது ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. அதில் ஜாங் மற்றும் அவரது உதவியாளர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஜாங் சாங் தேக் மற்றும் உதவியாளர்கள் 5 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் துரோகி, வெறுக்கத்தக்க அழுக்கான நபர், நாயை விட கேவலமானவர் என்று கொரிய செய்தி நிறுவனங்கள் வர்ணித்திருந்தன. முன்னதாக அவர் தூக்கிலிடப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் ஜாங் சாங் தேக் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட விதம் குறித்து சீனாவை சேர்ந்த செய்தி நிறுவனம் மிகவும் அதிர்ச்சிகரமான தகவலை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.
120 நாய்களை மூன்று நாட்களுக்கு உணவு கொடுக்காமல் பட்டினி போட்டு வைத்திருந்ததாகவும், அதன் பின் ஜாங் சாங் தேக் மற்றும் அவரது உதவியாளர்களின் ஆடைகளை களைந்து அந்நாய்களிடம் விடப்பட்டதாகவும், அந்த 120 நாய்களும் 6 பேரையும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடித்து குதறி கொன்றதை வட கொரிய அதிபர் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகளுடன் அமர்ந்து நேரடியாக பார்த்து ரசித்ததாகவும் கூறியுள்ளது.
நினைத்து பார்கக முடியாத அளவிற்கு கோரமான முறையில் ஜாங் சாங் தேக் மற்றும் ஐந்து உதவியாளர்களுக்கும் நிறைவேற்றப்பட்ட தண்டனை அந்நாட்டு அதிபரின் மிக கோரமான முகத்தை காட்டுவதாக அச்செய்தி நிறுவனம் மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.