"மரண தண்டனை கூடாது" கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை! கைதான சஞ்சய் சார்பில் ஆஜராகும் வக்கீல் இவர்தான்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையே இந்த வழக்கில் கைதான சஞ்சய் ராய் சார்பில் ஆஜராக 52 வயதான வழக்கறிஞர் கபிதா சர்க்கார் ஆஜராக இருக்கிறார். யார் இந்த கபிதா.. இவரது பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் 31 வயதான பயிற்சி பெண் மருத்துவர் கொடூரமாகப் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

சஞ்சய்: இந்தச் சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் தொடங்கி பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சஞ்சய் ராய் சார்பில் எந்தவொரு வழக்கறிஞரும் ஆஜராகத் தயாராக இல்லை.
இதற்கிடையே இப்போது இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சஞ்சய் ராய் சார்பில் 52 வயதான வழக்கறிஞர் கபிதா சர்க்கார் ஆஜராக இருக்கிறார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய்க்கு ஆதரவாக வாதாட வேறு எந்த வழக்கறிஞரும் முன்வராததால் சீல்டா நீதிமன்றமே கபிதா சர்க்காரை நியமித்துள்ளது.
கொல்கத்தா மருத்துவர் கூட்டு பலாத்காரம்? முக்கிய ஆதாரமாக மாறும் டிஎன்ஏ முடிவுகள்! அதிர வைக்கும் தகவல்
கபிதா சர்க்கார்: நாடே கொந்தளித்துப் போராடும் இந்த கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் சார்பில் ஆஜராக போகும் இந்த கபிதா சர்க்கார் யார்.. இவரது பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்த கபிதா சர்க்கார் ஹூக்ளி மொஹ்சின் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்தவர். அலிபூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகத் தனது பணியைத் தொடங்கிய இவர், சிவில் வழக்குகளில் தான் தொடக்கக் காலத்தில் கவனம் செலுத்தினார். கடந்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் இவர் குற்றவியல் வழக்குகளில் ஆஜராகி வாதாடத் தொடங்கினார்.
அரசு நியமித்த வழக்கறிஞர்: நமது நாட்டில் வழக்கறிஞர்களை அணுக முடியாமல் இருப்போருக்கு அரசே வழக்கறிஞர்களை நியமிக்கும். அந்த முறையிலேயே கபிதா சர்க்கார் வாதாடி வருகிறார். அவர் கடந்தாண்டு ஜூன் மாதம் சீல்டா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். ஓராண்டாக அவர் இந்த சீல்டா நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் நிலையில், இப்போது அவரை தான் கொல்கத்தா வழக்கில் நீதிமன்றம் குற்றவாளிக்காக ஆஜராக நியமித்துள்ளது.
52 வயதான இந்த பெண் வழக்கறிஞர் நீதிமன்ற விசாரணைகள் மூலமே நீதியைப் பெற்றுத் தர முடியும் என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், விசாரணைக்கு முன்பே ஒருவரைக் குற்றவாளி என்று முடிவு செய்வதும் சரியானது இல்லை எனக் கூறுகிறார். நமது நாட்டில் குற்றம் சாட்டப்பட்டவர் உட்பட அனைவருக்கும் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடாக இருக்கிறது.
மரண தண்டனை கூடாது: மேலும், மரண தண்டனையை எதிர்க்கும் கபிதா, எந்தவொரு குற்றத்திற்கும் அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை தான் வழங்கப்பட வேண்டும் என்கிறார். குற்றவாளிகள் தங்கள் செய்த குற்றங்கள் குறித்துச் சிந்தித்து மனம் திருந்த இந்த வாய்ப்பு அனுமதிக்கும் என்று நம்புவதாகவும் குறிப்பிடுகிறார். எல்லாவற்றையும் விட யாராக இருந்தாலும் அவர் செய்த குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவரை நிரபராதியாகவே கருத வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.












Click it and Unblock the Notifications