கோத்தகிரியில் கனமழையால் விபரீதம் - மரம் சாய்ந்ததால் கார் மீது விழுந்த மின்கம்பிகள்
கோத்தகிரி: கோத்தகிரியில் மரம் சாய்ந்ததில் காரின் மீது மின் கம்பிகள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையில் ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் நேற்று வீசிய காற்றின் காரணமாக கோத்தகிரியில் இருந்து கன்னேரிமுக்கு செல்லும் சாலையில் மதியம் 1.45 மணிக்கு ஒரு மரம் வேரோடு சாய்ந்தது. அப்போது அந்த மரத்தின் கிளைகள் மின்சார கம்பிகள் மீது விழுந்ததில் 2 மின் கம்பங்கள் சாலையில் விழுந்தன.
அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது மும்முனை இணைப்பு மின்சார கம்பிகள் விழுந்தன. உடனே காரில் வந்தவர்கள் காரை நிறுத்தி விட்டு இறங்கி ஓடி விட்டனர். காரில் கோத்தகிரி பகுதியை சேர்ந்த தந்தை, மகள் வந்ததாக தெரிகிறது. அவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. மரம் விழுந்த இடத்தில் இருந்து சுமார் 5 மீட்டர் தூரத்தில் கார் நிறுத்தப்பட்டதாலும், காரின் மீது மின்கம்பிகள் விழுந்தவுடன் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாலும் காரில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் மரத்தை வெட்டி அகற்றி, மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் காரின் மீது விழுந்த மின் கம்பிகளும் அகற்றப்பட்டன.
மேலும் ரோட்டின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மரம் அகற்றப்பட்ட பின்னர் 2.45 மணிக்கு போக்குவரத்து சீரானது. கார் மீது மின் கம்பிகள் விழுந்த சம்பவம் குறித்து தகவல் பரவியதால் அங்கு ஏராளமான மக்கள் கூடினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே கோத்தகிரியை அடுத்த கீழ்கோத்தகிரி முத்தமிழ் நகரில் வசிக்கும் மாலைமணி மற்றும் தேன்மொழி ஆகியோரின் வீடுகளின் ஒரு பகுதி மழை காரணமாக இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினார்கள்.
இது குறித்து தகவல் அறிந்த கீழ்கோத்தகிரி வருவாய் ஆய்வாளர் நந்தினி, கிராம நிர்வாக அலுவலர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டனர். அவர்களுக்கு நிவாரணத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.