வசுந்தரராஜே மகன் நிறுவனத்துக்கு ரூ11.63 கோடி கொடுத்த லலித் மோடி -அமலாக்கப் பிரிவு விசாரணை!!
டெல்லி: ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரராஜே சிந்தியாவின் மகனுக்கு சொந்தமான நிறுவனத்துக்கு லண்டனில் தலைமறைவாக இருக்கும் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடியின் நிறுவனம் ரூ11.63 கோடி கொடுத்திருப்பது தொடர்பாகவும் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
ஐ.பி.எல். போட்டிகளில் நிதி முறைகேடு புகாரில் சிக்கியதைத் தொடர்ந்து இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் தஞ்சமடைந்துள்ளார் லலித் மோடி. அவருக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரராஜே சிந்தியா ஆகியோர் உதவி வந்துள்ளனர். இதனை லலித் மோடியும் ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் லலித் மோடிக்கு சொந்தமான ஆனந்த் ஹெரிடேஜ் ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு மொரீஷியஸ் நாட்டு நிறுவனங்கள் மூலமாக ரூ21 கோடி கைமாறியது குறித்து அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.
இந்த பணமானது ராஜஸ்தான் முதல்வர் வசுந்தராஜே சிந்தியாவின் மகனும் பாரதிய ஜனதா கட்சி எம்.பி.யுமான துஷ்யந்த் சிங்கின் நியாந்த் ஹெரிடேஜ் ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலமாக கைமாறியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வசுந்தரராஜே மகன் நிறுவனத்துக்கு மொத்தம் ரூ11.63 கோடி கடனாகவும் பங்குகள் வாங்கியது தொடர்பாகவும் லலித் மோடி நிறுவனம் கொடுத்திருக்கிறது.
இதில்தான் அன்னிய செலாவணி முறைகேடு நடந்திருப்பதாகவும் அமலாக்கப் பிரிவு சந்தேகித்து விசாரணைகளை நடத்தி வருகிறது. ஆனால் வசுந்தரராஜே சிந்தியாவின் மகனோ, அனைத்து கணக்குகளும் வெளிப்படையானவே எனக் கூறி வருகிறார்.
லலித் மோடி விவகாரத்தில் என்னென்ன பூதம் கிளம்புமோ?