மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் குற்றவாளி.. சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
ராஞ்சி: மாட்டுத் தீவன ஊழல் வழக்கிலும் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தை குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது சிபிஐ நீதிமன்றம்.
லாலு பிரசாத் யாதவ் 1991 முதல் 1996 வரை பீகார் முதல்வராகப் பதவி வகித்தார். அப்போது, கால்நடைகளுக்காக வாங்கப்பட்ட தீவனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த கால்நடை ஊழல் வழக்கை, சிபிஐ விசாரித்தது. இந்த ஊழல் வழக்கில் சிபிஐ தரப்பில் 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

லாலு பிரசாத்
கால்நடை தீவன வழக்கில் லாலு பிரசாத் மீது மட்டும் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2013-ல் லாலு பிரசாத் குற்றவாளி என முதல் வழக்கில் தீர்ப்பளித்தது. அதன்பிறகு 2017, 2018 ஆண்டுகளில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. மொத்தமாக இந்த வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் கிடைத்தது.

சிறை
குற்றவாளி என தண்டனை வழங்கப்பட்டு, மூன்றரை வருடங்களாக ஜார்கண்டின் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார் லாலு பிரசாத் யாதவ். இந்நிலையில் லாலுவுக்கு சில மாதங்களாக உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. சிகிச்சைக்காக லாலு டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். உடல்நலக் குறைவால் அவருக்கு ஜாமீன் கிடைத்தது.

மற்றொரு வழக்கு
இந்தநிலையில் கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான மேலும் 5வது வழக்கு, ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பல நாட்கள் இந்த வழக்கின் விசாரணை நடந்த நிலையில், மாட்டுத் தீவன வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது சிபிஐ நீதிமன்றம்.
ராஞ்சி தோரந்தா கருவூலத்தில் இருந்து ரூ. 139 கோடி பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது நிரூபிக்கப்பட்டது.

தீர்ப்பு
கால்நடைத் தீவன வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், லாலு பிரசாத் உள்ளிட்ட 75 பேர் குற்றவாளிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரங்களை பிப்ரவரி 18ஆம் தேதி நீதிமன்றம் அறிவிக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications