மகாத்மா காந்தியின் 147வது பிறந்தநாள்... நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் மலர்தூவி மரியாதை
டெல்லி: மகாத்மா காந்தியின் 147வது பிறந்ததினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் அவரது உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
மகாத்மா காந்தியின் 147வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் வெங்ககைய்ய நாயுடு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல், நாடு முழுவதும் அவரது உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்தும் மற்றும் உருவ படத்திற்கு மலர்தூவியும் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
சென்னையிலும் மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதேபோல், அமைச்சர்கள் ஓ பன்னீர் செல்வம், காமராஜ் உள்ளிட்டோரும் மலர் தூவி தங்களது மரியாதையைச் செலுத்தினர்.
லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாள்:
இன்று முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் 112வது பிறந்தநாளும் கொண்டாடப்படுகிறது. எனவே அவரது நினைவிடத்திலும் தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். லால் பகதூர் சாஸ்திரியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, அதனைத் தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.