புதிய ராணுவ தளபதியாக தல்பீர் சிங் - பாதுகாப்பு அமைச்சகம் பரிந்துரை!
டெல்லி: நாட்டின் புதிய ராணுவ தளபதியாக தல்பீர் சிங் சுகாக்கை நியமிக்க பாதுகாப்பு அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
நாட்டின் ராணுவ தளபதியாக இருந்து வரும் பிக்ரம் சிங்கின் 26 மாத பதவிக்காலம் வருகிற ஜூலை 31-ந்தேதியுடன் முடிவடைகிறது. எனவே அவருக்கு பதிலாக புதிய ராணுவ தளபதியாக தற்போதைய துணைத்தளபதி தல்பீர் சிங் சுகாக்கை நியமிக்க பாதுகாப்பு அமைச்சகம் பிரதமர் அலுவலகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான நியமனங்கள் குழு அவரது நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. தல்பீர் சிங் சுகாக்கை புதிய ராணுவ தளபதியாக நியமிக்கும் அறிவிப்பு வருகிற மே 1-ந்தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் பதவிக்காலம் முடிவடைய இருக்கும் காங்கிரஸ் கூட்டணி அரசு, புதிய ராணுவ தளபதியை நியமிப்பதற்கு பாரதிய ஜனதா ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடமும் பாஜக மனு கொடுத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.