மகாராஷ்டிரா, ஹரியனாவில் அக்.15-ல் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல்! அக்.19-ல் வாக்கு எண்ணிக்கை!!
டெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபை தேர்தல்கள் ஒரே கட்டமாக அக்டோபர் 15-ந் தேதி நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டசபையின் பதவிக் காலம் நவம்பர் 8ந் தேதியுடனும் ஹரியானா சட்டசபையின் பதவிக் காலம் அக்டோபர் 27ம் தேதியுடனும் நிறைவடைகிறது. இந்த இரு மாநிலங்களிலுமே காங்கிரஸ் அரசுதான் நடைபெற்று வருகிறது.
இம்மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களுக்கு அக்டோபர் 15-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார்.
மகாராஷ்டிராவில் 288- ஹரியானாவில் 90 தொகுதிகள்
டெல்லியில் செய்தியாளர்களிடம் தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் கூறியதாவது:
மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகளிலும் ஹரியானாவில் 90 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளது. மகாராஷ்டிராவில் 90,403, ஹரியானாவில் 16,244 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கண்டிப்பாக நிரப்பனும்
இத்தேர்தலில் நோட்டா வாய்ப்புடன் கூடிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வேட்பாளர்கள் வேட்புமனுவில் அனைத்து விவரங்களையும் கண்டிப்பாக நிரப்ப வேண்டும்.
நடத்தை விதிகள் அமல்
இன்று முதல் இரண்டு மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வருகின்றன.
20-ந் தேதி முதல் வேட்புமனுக்கள்
இத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 20-ந் தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய செப்டம்பர் 27-ந் தேதி கடைசி நாள்.
வாபஸ் பெற கடைசி நாள்
செப்டம்பர் 29-ந் தேதி வேட்பு மனுக்கள் மறுபரிசீலனை செய்யப்படும். அக்டோபர் 1-ந் தேதி வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள்.
வாக்குப் பதிவும் வாக்கு எண்ணிக்கையும்
அக்டோபர் 15-ந் தேதியன்று வாக்குப் பதிவு நடைபெறும். அன்று பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 19-ந் தேதி எண்ணப்படும்.
இவ்வாறு சம்பத் கூறினார்.
காங்கிரஸ் ஆட்சி...
மகாராஷ்டிராவில் காங்கிரஸின் பிருத்வி சவாண், ஹரியானாவில் காங்கிரஸின் பூபேந்தர்சிங் ஹூடா ஆகியோர் முதல்வர்களாக உள்ளனர். லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் அண்மையில் 4 மாநிலங்களில் சட்டசபை இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. இத்தேர்தல்களில் பாஜக பின்னடைவை எதிர்கொண்டது.
பாஜக- காங்கிரஸ் போராட்டம்
தற்போது மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பின்னர் முதல் முறையாக இரு மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதுவும் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் இம்மாநிலங்களை தக்க வைக்க அக்கட்சி முயற்சிக்கும். அதே நேரத்தில் இவற்றைக் கைப்பற்ற பாஜக பகீரத பிரயத்தனத்தில் ஈடுபடும் என்பதால் தேர்தல் களம் பரபரப்பாக இருக்கும்.