எம்.பிக்கள் போல கிராமங்களை தத்தெடுக்கும் எம்.எல்.ஏக்கள் - மகராஷ்டிராவில் புதிய திட்டம்!
மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்கள் தாங்கள் விரும்பும் கிராமத்தைத் தத்தெடுத்து, அங்கு வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்த புதிய திட்டம் ஒன்றை அந்த மாநில அரசு அறிமுகப்படுத்துகிறது.
இது குறித்து மகாராஷ்டிர மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பங்கஜா முண்டே, "தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தாங்கள் விரும்பும் கிராமத்தைத் தத்தெடுக்க "எம்.எல்.ஏ மாதிரி கிராமத் திட்டம்" ஒன்றினை மாநில அரசு வரும் 15ஆம் தேதி அறிமுகப்படுத்துகிறது.
கல்வி, மருத்துவமனை, கழிவு நீர்க் கால்வாய், குழாய் மூலம் குடிநீர் விநியோகம், சுகாதாரம் போன்றவற்றில், கிராமங்களை வளர்ச்சியடையச் செய்வதே எம்.எல்.ஏ மாதிரி கிராமத் திட்டத்தின் நோக்கமாகும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கிராமங்களின் வளர்ச்சிக்கென இதுவரை முறையாக கவனம் செலுத்தப்பட்டது இல்லை. இதனால் அரசு நிதி வீணாகி வந்தது. இதனையடுத்தே இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றும் பங்கஜா முண்டே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இதேபோன்ற திட்டம் எம்.பிக்களுக்கு உள்ளது என்பது நினைவிருக்கலாம்.