சொகுசு கார் வரி ஏய்ப்பு: நடிகர் பகத் பாசில் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு!
சொகுசு கார் வரி ஏய்ப்பு விவகாரத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் கைதாகி பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம்: சொகுசு கார் விவகாரத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக நடிகர் பகத் பாசில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் சொகுசு கார்களை புதுவையில் போலி முகவரி கொடுத்து பதிவு செய்து நடிகர்- நடிகைகள் வரி ஏய்ப்பு செய்தனர் என்பது புகார். நடிகை அமலாபால், நடிகர்கள் சுரேஷ் கோபி, பகத் பாசில் உள்ளிட்டோர் மீது இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதனிடையே இந்த வரி ஏய்ப்பு தொடர்பாக நடிகர் பகத் பாசிலிடம் திருவனந்தபுரத்தில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை 2 மணிநேரம் நடைபெற்றது.
விசாரணையின் போது குற்றத்தை பகத் பாசில் ஒப்புக் கொண்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். செய்த குற்றத்திற்காக அபராதத் தொகையை செலுத்தவும் தயாராக இருப்பதாக பகத் பாசில் கூறியுள்ளார்.
இதனையடுத்து இரண்டு பேரின் உத்தரவாதம் மற்றும் ரூ. 50 ஆயிரம் பத்திரத்தில் கையெழுத்திடப்பட்டதையடுத்து பகத் பாசில் விடுதலை செய்யப்பட்டார். சொகுசு கார் வரி ஏய்ப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதால் கடந்த வாரமே அவர் ஆலப்புழா நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றிருந்தார்.
திரையரங்குகளில் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் திரைப்படத்தில் வில்லன் பாத்திரத்தில் நடித்திருக்கிறார் பகத் பாசில். இதே வழக்கில் முன்ஜாமின் கோரி நடிகை அமலாபாலும் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications