கல்பர்கி கொலை எதிரொலி: எழுத்தாளர்களுக்கு எதிராக டிவிட்டரில் கருத்து பதிவு செய்த இளைஞர் கைது
மங்களூரு: கன்னட எழுத்தாளர் கல்புர்கி கொலையைத் தொடர்ந்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் டிவிட்டரில் கருத்து பதிவு செய்த பட்டதாரி இளைஞரை கர்நாடகா போலீஸார் கைது செய்துள்ளனர்.
பிரபல கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்பர்கி நேற்று முன்தினம் காலை அவரது வீட்டில் வைத்து மர்மநபரால் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்பர்கி கொலையாளியை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், கல்பர்கி கொல்லப்பட்ட சில மணி நேரத்தில் டிவிட்டரில் எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியவாதிகளுக்கு எதிரான கருத்து ஒன்று பதிவானது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருந்த அந்த வாசகங்களைக் கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பெங்களூரு சைபர் கிரைம் போலீஸார், தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவு செய்தது தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகாவை சேர்ந்த பட்டதாரியான புவித் செட்டி(26) என்பது கண்டுபிடிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து, புவித் செட்டியை கைது செய்த போலீஸார், அவருக்கு வேறு ஏதேனும் சமூக விரோத அமைப்புடன் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.