அடடே.... நம்ம ஊரில் கேட்ட கமிஷன்... கரப்ஷன்... மணிப்பூர் தேர்தல் களத்தில் பாஜக தலைவர் நட்டா பேச்சு
இம்பால்: தமிழக சட்டசபை தேர்தலில் எதிரொலித்த கமிஷன்... கரப்ஷன் முழக்கம் தற்போது மணிப்பூர் சட்டசபை தேர்தலிலும் கேட்கிறது. மணிப்பூர் சட்டசபை தேர்தல் பிரசாராத்தில் எதிர்க்கட்சிகள் கமிஷன், கரப்ஷனில் கவனமாக இருக்கின்றன என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா சாடியிருந்தார்.
மணிப்பூர் மாநிலத்தில் 2017 சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி ஆட்சி அமைத்தது பாஜக. தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி, லோக் ஜனசக்தி கட்சி ஆகியவற்றுடன் இணைந்து பாஜக கூட்டணி ஆட்சி மணிப்பூரில் நடைபெற்று வருகிறது.
மணிப்பூர் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மணிப்பூர் சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் ஓரிரு நாட்களில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மணிப்பூரில் ஜேபி நட்டா பிரசாரம்
மணிப்பூரில் ஆளும் பாஜக கூட்டணி ஆட்சியைத் தக்க வைக்க தீவிரம் காட்டி வருகிறது. மணிப்பூரில் பழங்குடிகள் அருங்காட்சியகத்தை அண்மையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா மணிப்பூரில் தேர்தல் பிரசாராத்தை தொடங்கினார்.

மணிப்பூர் மக்கள் தீர்மானிக்கட்டும்
இம்பாலில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஜே.பி.நட்டா பேசியதாவது: மணிப்பூரில் பிரிவினைவாதமும் தீவிரவாதமும் வேண்டுமா? நிலையான சூழ்நிலை வேண்டுமா? பிரித்தாளும் சூழ்ச்சி வேண்டுமா? மக்கள் ஒற்றுமை வேண்டுமா? என்கவுண்ட்டர்கள் வேண்டுமா? அமைதி திகழ வேண்டுமா? விளையாட்டுத் துறையில் முன்னேற்றம் காண வேண்டுமா? போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருக்க வேண்டுமா? என்பதை மணிப்பூர் மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

கமிஷன், கரப்ஷன்
மணிப்பூர் மண்ணின் இளைஞர்கள் போதைப் பொருட்களை விட விளையாட்டு துறையைத்தான் தேர்வு செய்வார்கள் என நம்புகிறேன். மணிப்பூர் முன்னேற்றம் பெற வேண்டுமானால் தாமரை மலர்ந்தே தீர வேண்டும். எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடியை விமர்சிப்பதில்தான் மும்முரமாக உள்ளன. ஆனால் பிரதமர் மோடியை விமர்சிப்பதும் தேசத்தை விமர்சிப்பதும் ஒன்று என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றனர். எதிர்க்கட்சிகளுக்கு கமிஷன், கரப்ஷனில்தான் முழு கவனமும் இருக்கிறது. ஆனால் பாஜகவோ இந்தியாவை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதில் தீவிரமாக இருக்கிறது. இவ்வாறு ஜே.பி. நட்டா பேசினார்.

தமிழக தேர்தல் களத்தில்...
தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, அதிமுக ஆட்சி குறித்து திமுக தலைவரான தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். தமது பொதுக்கூட்டங்களில் அதிமுக அரசை குறிப்பிடும் போது கமிஷன், கலெக்சன், கரப்ஷன் அரசாங்கம் என சாடி இருந்தார். தற்போது அதேபோன்ற ஒரு முழக்கம் மணிப்பூர் தேர்தலிலும் எதிரொலித்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications