ஜிஎஸ்டி நடைமுறையானால் மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகள் இருக்காது!
ஜிஎஸ்டி அமலுக்கு வந்தால் மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகள் இருக்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி: ஜிஎஸ்டி நடைமுறைக்கு வரும்பட்சத்தில், மாநில எல்லைகளில், சோதனைச்சாவடிகள் இயங்காது என தகவல் வெளியாகியுள்ளது.
இன்று நள்ளிரவு முதலாக, நாடு முழுவதும் ஜிஎஸ்டி என்ற பெயரில், சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வருகிறது. இந்த வரிவிதிப்பின்படி, மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநில எல்லைகளிலும், சோதனைச்சாவடிகள் நிறுவப்பட்டு, சரக்குப் பொருட்களை பரிசோதித்து, அதற்கான வரி வசூலிக்கப்படுவது வழக்கம். இது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். ஆனால், ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தால், மாநிலங்கள் வரி வசூலிக்கத் தேவையற்ற நிலை உருவாகும்.
எனவே, மாநில எல்லைகளில் இயங்கும் சோதனைச்சாவடிகளுக்கு இன்றே கடைசி நாளாகும். பீகார், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநில அரசுகள், நேற்றே இதுபற்றி இறுதி முடிவு செய்துள்ளன. இதன்படி, தங்களது மாநில எல்லைகளில், உள்ள சோதனைச்சாவடிகளை அகற்ற, இவ்விரு மாநிலங்களும் தீர்மானித்துள்ளன. இந்த நடைமுறையை நேற்று முதலே, இவ்விரு மாநிலங்களும் அமல்படுத்தியுள்ளன.
கர்நாடகா, மாநில அரசும் இதேபோன்ற கருத்தை தெரிவித்துள்ளது. ஆனால், எந்த தேதியில் இந்த அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படவில்லை. இதேபோன்ற நடைமுறையை ஏற்கனவே, குஜராத், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிஷா மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
அதேசமயம், இதுபற்றி சரக்கு லாரி உரிமையாளர்கள் கூறுகையில், ''சோதனைச்சாவடி அகற்றப்படுவது என்பது முற்றிலுமாக, சோதனைச்சாவடி கிடையாது என அர்த்தம் இல்லை. சோதனைச்சாவடியில் வழக்கம்போல, வாகனச் சோதனை நடைபெறும். ஆனால், வரி வசூலிப்பது மட்டும் நடைபெறாது. இது எங்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான்,'' எனக் குறிப்பிட்டனர்.