ஓட்டுப் போட தவறிய மீரா குமார் - சொந்த தொகுதியில் “பிஸியோ பிஸி”
சாசரம்: தன்னுடைய சொந்த தொகுதியில் தேர்தல் கண்காணிப்பில் தீவிரமாக ஈடுபட்ட காரணத்தால் டெல்லி சென்று ஓட்டுப்போட தவறினார் மக்களவை சபாநாயகர் மீராகுமார்.
தலைநகர் டெல்லியில் இன்று ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது.
பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இன்று தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ள நிலையில் சபாநாயகர் மீரா குமார் பீகாரில் தனது சொந்த தொகுதியில் வாக்குப்பதிவு நடந்ததால் டெல்லி வந்து வாக்களிக்கவில்லை.
டெல்லியில் அடையாள அட்டை:
பீகார் மாநிலம் சாசரம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மீரா குமாரின் பெயர் வாக்காளர் பட்டியலில் டெல்லி நியூ பிரண்ட்ஸ் காலனி விலாசத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொகுதியில் முகாம்:
வாக்களிக்க டெல்லிக்கு செல்லாவிட்டாலும் தனது தொகுதியில் முகாமிட்டுள்ள மீரா குமார் தேர்தலில் முறைகேடுகள் நடக்காத வகையில் தீவிரமாக கண்காணித்து வருகிறார்.
மூன்றாவது முறை போட்டி:
மக்களவைக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடும் மீரா குமாரை எதிர்த்து சாசரம் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் சேத்தி பஸ்வான், ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் கே.பி.ராமையா ஆகியோர் களத்தில் உள்ளனர்.
ஜெகஜீவன்ராம் மகள்:
மீரா குமாரின் தந்தையும், தலித் தலைவருமான ஜெகஜீவன் ராம் இந்த தொகுதியில் 1952 ஆம் ஆண்டில் இருந்து 1984 ஆம் ஆண்டு வரை 8 முறை வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.