கோமாதாவுக்கு ஜே என்று கத்தியபடி 2 முஸ்லீம் பெண்களை சரமாரியாக உதைத்த கும்பல்..!
மண்டசூர், மத்தியப் பிரதேசம்: மத்தியப் பிரதேச மாநிலம் மண்டசூர் என்ற ஊரில் உள்ள ரயில் நிலையத்தில் மாட்டுக் கறியுடன் வந்த இரு முஸ்லீம் பெண்களை ஒரு கும்பல் சரமாரியாக அடித்து உதைத்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்த போலீஸாரின் செயலும் கடும் கோப அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதை வேடிக்கை பார்த்த பொதுமக்களும் தடுக்க முயலாமல் செல்போனில் படம் எடுத்தபடி இருந்தனர். போலீஸாரோ அரை குறை மனதுடன் தாக்கியவர்களை விலக்கி விட முயற்சித்தனர். ஆனால் பல சமயங்களில் அவர்கள் வேடிக்கை பார்த்தபடி சும்மாவே நின்றிருந்தனர். இதனால் தாக்குதல் நடத்திய கும்பல் அந்தப் பெண்களை காலால் உதைத்தும், கையால் அடித்தும், கன்னத்தில் அறைந்தும் மோசமாக நடந்து கொண்டது.
அந்த இரு பெண்களும் விற்பனை செய்வதற்காக 30 கிலோ மாட்டுக் கறியுடன் ரயிலில் வந்துள்ளனர். இதுகுறித்து போலீஸாருக்கு சிலர் பசு கறியுடன் வருவதாக தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்களைக் கைது செய்வதற்காக போலீஸார் வந்தனர். அந்த சமயத்தில்தான் அப்பெண்கள் இருவரும் தாக்கப்பட்டனர்.
விடாமல் தாக்குதல்
போலீஸார் அவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றபோதும் கூட அக்கும்பல் அப்பெண்களை தொடர்ந்து விடாமல் தாக்கிய வெறித்தனம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
கோமாதாவுக்கு ஜே
தாக்குதல் நடத்திய கும்பல் புனித கோமாதாவுக்கு ஜே என்று வாழ்த்தி கோஷமும் போட்டபடி தாக்கினர். அவர்கள் தாக்கியதில் ஒரு பெண் மயங்கி விழுந்து விட்டார். கிட்டத்தட்ட அரை மணி நேரம் இந்த அராஜக தாக்குத் நடந்தது.
எருமைக் கறி
பின்னர் போலீஸார் கூறுகையில் இவர்கள் பசுவின் கறியைக் கொண்டு வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நாங்கள் அவர்களைக் கைது செய்து இறைச்சியைக் கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பினோம். சோதனையில் அது எருமை மாட்டின் இறைச்சி என்று தெரிய வந்துள்ளது என்றனர்.
வழக்குப் பதிவு
இருப்பினும் இறைச்சி விற்பதற்கு அனுமதி இல்லாமல் விற்பனை செய்ய முயன்றதாக கூறி இரு பெண்கள் மீதும் போலீஸார் வழக்குத் தொடர்ந்துள்ளனராம்.