பீகார் சட்டசபை தேர்தல்.. 6 நாளில் 17 பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும் பிரதமர் மோடி
பாட்னா: பீகார் மாநிலத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து 6 நாளில் 17 பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பீகார் சட்டசபைக்கு 5 கட்டங்களாகத் தொடங்கிய தேர்தலின் முதல் 2 கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளன. எஞ்சிய மூன்று கட்டத் தேர்தல்கள் முறையே, வரும் 28, அடுத்த மாதம் 1 மற்றும் 5-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா மாநிலத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் பிரதமர் மோடி பீகார் மாநிலத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குச் சேகரிக்க உள்ளார்.
நாளை முதல் 6 நாட்களில் 17 இடங்களில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாக அக்கட்சி சார்பில் விரிவான அட்டவணையுடன் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்ட தேர்தலுக்கும் ஏழு முதல் எட்டு பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பேசுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல் இரண்டு கட்ட தேர்தலுக்காக மோடி ஏற்கனவே 9 பொதுக்கூட்டங்களில் பேசியிருக்கிறார். தற்போதைய அட்டவணையுடன் சேர்த்தால், அவர் மொத்தம் 26 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். இது மகாராஷ்டிர மாநிலத்தில் பிரச்சாரம் செய்ததைவிட அதிகம்.
இந்த தேர்தலில் பாரதிய ஜனதா எப்படியும் ஆட்சியைக் கைப்பற்றிவிடும் என்ற நம்பிக்கையில் அக்கட்சியினர் வலம் வருகின்றனர்.
லோக்சபா தேர்தலில் மோடியின் பிரசார வியூகம் மக்கள் மத்தியில் பாரதிய ஜனதாவின் செல்வாக்கை பெருமளவு உயர்த்தியது. அதுவே மத்தியில் ஆட்சி மாற்றத்தையும் உண்டாக்க காரணமாகியது. அந்தத் தாக்கம் பீகார் தேர்தலிலும் இருக்கும் என்பதும் பாஜகவின் கணக்கு.