பாஜக ஆட்சிக்கு வந்தால் நதிகள் இணைக்கப்படும்-'தங்கத்தை' அறுவடை செய்யலாம் என்கிறார் மோடி
சித்தூர்: தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நதிகள் இமைக்கப்படும் என்று ஆந்திராவில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய மோடி, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவு திட்டமான நதிநீர் இணைப்பை நினைவு கூர்ந்தார்.
ஆந்திராவை சேர்ந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், மறைந்தபோது அவரது உடலை காங்கிரஸ் அலுவலகத்திற்குள் கொண்டு செல்லக்கூட அந்த கட்சி அனுமதிக்கவில்லை. ஜூன் 2ம் தேதிதான் இத்தாலி நாடு உருவாகியது. அதே நாளில் தெலுங்கானா மாநிலம் உருவாகும் என்று தாய்-மகன் அரசு நாள் குறித்துள்ளது.
இந்தியா தற்போது ஊழல் நாடாக மாற்றப்பட்டுள்ளது. இனிமேல் அது 'திட்ட' நாடாக மாற வேண்டும். நலத்திட்டங்கள், வளர்ச்சி திட்டங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.
சீமாந்திரா மக்களுக்கு இரு வாய்ப்புகள் கிடைத்துள்ளன. ஒன்று ஊழல் ஆந்திரா மற்றொன்று தங்கமான ஆந்திரா. இவ்விரண்டில்தான் உங்களது தேர்வு அமைய வேண்டும். தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்து பாஜக போட்டியிடுவது ஆந்திர மாநிலத்தையும் வளர்ச்சியில் அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றால், வாஜ்பாயின் கனவு திட்டமான நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்வடுத்துவோம். அப்போது வறண்ட பகுதியான ராயலசீமாவுக்கு மிகுந்த பலன் கிடைக்கும். ராயலசீமா பகுதி 'தங்க ஆந்திராவாக' மாறும். உங்களது நிலங்களில் நீங்கள் தங்கத்தைப்போல விவசாய பொருட்களை அறுவடை செய்ய முடியும் என்றார்.