எப்படி இருந்த கம்பெனி இப்படி ஆயிடுச்சே.. எச்.எம்.டி கடிகார நிறுவனத்தை மூட மத்திய அரசு முடிவு
டெல்லி: நஷ்டத்தில் இயங்கி வந்த எச்.எம்.டி., வாட்சஸ் உட்பட, மூன்று அரசுத்துறை நிறுவனங்களை மூட, பிரதமர் மோடி தலைமையில், நடைபெற்ற, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பெங்களூரில் உள்ள, எச்.எம்.டி., வாட்சஸ், ஜம்முவில் உள்ள எச்.எம்.டி. சினார் வாட்சஸ், ஹைதராபாத்தை சேர்ந்த, எச்.எம்.டி. பியரிங்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் மூடப்பட உள்ளன. இந்நிறுவனங்களைச் சேர்ந்த, 1,000 தொழிலாளர்கள், 2007ம் ஆண்டு ஊதிய விகிதத்தின் கீழ், தங்களது விருப்ப ஓய்வூதிய திட்ட சலுகைகளை (விஆர்எஸ்) பெறுவார்கள். இதற்கு, மத்திய அரசு, 427 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கும்.
கடந்த, 50 ஆண்டுகளுக்கு மேலாக, இந்தியர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவை எச்.எம்.டி. கைக்கடிகாரங்கள்.
ஜப்பானைச் சேர்ந்த, சிட்டிசன் வாட்ச் நிறுவனத்தோடு சேர்ந்து, பெங்களூரில், எச்.எம்.டி. வாட்ச் நிறுவனம், 1961ல் துவக்கப்பட்டது.
உள்நாட்டில், முதன் முதலாக இத்தொழிற்சாலையில்தான், கைக்கடிகாரம் தயாரிக்கப்பட்டது என்ற பெருமை இதற்கு உண்டு. முதல் கடிகாரத்தை, அப்போதைய பிரதமர் நேரு வெளியிட்டார். இதுவரை, 10 கோடிக்கும் அதிகமான கைக்கடிகாரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
எச்.எம்.டி. சினார் வாட்ச் நிறுவனம், 'குவார்ட்ஸ்' கைக்கடிகாரங்களையும், எச்.எம்.டி. பியரிங்ஸ் நிறுவனம், மோட்டார்களுக்கான, 'பால் பியரிங்கு'களையும் தயாரித்து வந்தன. இந்த மூன்று நிறுவனங்களையும் மூட, 2014 செப்டம்பரில், மத்திய அரசு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.