கேள்வி எழுப்பினால் துரோகியாக சித்தரிக்கிறது மத்திய அரசு- சல்மான் குர்ஷித் காட்டம்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கேள்வி எழுப்புவதை விரும்பவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
சண்டிகர்: நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கேள்வி கேட்பதை விரும்பவில்லை என்றும், அவ்வாறு கேள்வி எழுப்புகின்றவர்களை துரோகிகளாக சித்திரிக்கிறது என்றும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான சல்மான் குர்ஷித் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக சல்மான் குர்ஷித் கூறியதாவது:
கேள்வி எழுப்புகின்றவர்களை துரோகிகளாகவோ அல்லது பொறுப்பற்றவர்களாகவோ முத்திரை குத்தும் செயலில் அரசு இறங்கியுள்ளது.
மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து வரும் கள்ள நோட்டுக்களை தடுப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும். இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள கள்ள நோட்டுகளின் மொத்த தொகை குறித்த விவரங்களையும் மத்திய அரசு வெளியிட வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கருப்பு பணத்தை தடுப்பது குறித்து விளக்கம் அளிப்பதில் தோல்வி கண்டுள்ளது. அடுத்த தேர்தலை காசோலை மூலமே எதிர்கொள்ள இருப்பதாக பாஜக குறிப்பிட்டுள்ளதை வரவேற்கிறோம். இது நடைமுறைக்கு வந்தால் கருப்பு பணம் ஒழிந்துவிடும் என்பதை தாம் ஒப்புக் கொள்கிறேன்.
இவ்வாறு சல்மான் குர்ஷித் கூறினார்.