ராமர், அனுமான், குருஷேத்திரப் போர்... இதெல்லாம் ம.பி. இன்ஜினியரிங் படிப்பில் சேர்ப்பு!
போபால்: மத்திய பிரதேசத்தில் புதிய கல்விக் கொள்கைப்படி பொறியியல் படிப்புகளில் ராமாயணம், மகாபாரதம் ஆகிய காப்பியங்கள் இடம்பெற்றுள்ளன.
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி இருக்கிறது. இப்புதிய கல்வி கொள்கையின் படி பொறியியல் பாடங்களை தாய்மொழிகளிலும் படிக்கலாம்.
பழிக்கு பழி.. 3 வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற 2 பிஞ்சுகள்.. அப்படியே அதிர்ந்து போன சிவகாசி
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் ஆளும் பா.ஜ.க.அரசு பொறியியல் படிப்புகளில் ராமாயணம், மகாபாராதம் ஆகியவற்றை சேர்த்துள்ளது. மேலும் ராமசரித்திரமனாஸ் ஒரு ஆப்சனலாகவும் சேர்க்கப்பட்டுள்ளது.
ராமாயணம் படிப்பதில் தவறா?
இது தொடர்பாக ம.பி. மாநில உயர்க்லவித்துறை அமைச்சர் மோகன் யாதவ் கூறுகையில், ராமாயணம், மகாபாரதத்தை பொறியியல் மாணவர்கள் படிப்பதில் தவறு எதுவும் இல்லை. அனைத்தையும் மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றார். மேலும் புதிய கல்விக் கொள்கையின்படி தயாரிக்கப்பட்டது இந்த சிலபஸ் என்றார் மோகன் யாதவ்.
சமூக வலைதளங்களில் விவாதம்
மத்திய பிரதேச பாஜக அரசின் இந்த கருத்து பெரும் விவாதத்தை சமூக வலைதளங்களில் ஏற்படுத்தியுள்ளது. இந்துக்களின் புனித காப்பியங்களைப் போல பிற மதத்தினரின் புனித நூல்களையும் பாடத்திட்டங்களில் இடம்பெறச் செய்யலாமே? என்பது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி. அதே நேரத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு ராமாயணமும் மகாபாரதமும் எப்படி உதவும் என்கிற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
ராமரின் படிப்பு குறித்து கருணாநிதி
பொறியியல் படிப்புகளில் ராமாயணம் என்கிற செய்தியை நாம் படிக்கும் போது தமிழகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்று நினைவுக்கு வராமல் போகாது. 2007-ம் ஆண்டு செப்டம்பர் 16-ந் தேதி ஈரோட்டில் அப்போதைய முதல்வர் கருணாநிதி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், திமுகவை அழிக்க நினைக்கும் குள்ளநரிகளில் சில கூறுகின்றன. 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மனிதன்.. அவன் பெயர் ராமனாம். அவன் கட்டிய பாலம் ராமர் பாலமாம். அந்தப் பாலத்தின் மீது யாரும் கை வைக்கக் கூடாதாம். அந்த ராமன் எந்த பொறியியல் கல்லூரிக்கு சென்றுவிட்டு வந்து இந்த பாலத்தைக் கட்டினான்? அதற்கு ஆதாரம் இருக்கிறதா? என கேள்வி கேட்டார் கருணாநிதி.
சர்ச்சையும் வன்முறையும்
அப்போதுதான் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த தலைவராக இருந்த ராம்விலாஸ் வேதாந்தி, ராமரை இழிவாகப் பேசிய கருணாநிதியின் தலையையும் நாக்கையும் துண்டித்து வருவோருக்கு தங்கம் பரிசாகத் தரப்படும் என அறிவித்தார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையானது. சென்னை பா.ஜ.க. தலைமை அலுவலகத்தை ஆயிரக்கணக்கான திமுகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தின் மீது பாஜக அலுவலகம் மீது பாறாங்கற்கள் வீசப்பட்டன. பாஜக கொடிக் கம்பம் வெட்டி சாய்க்கப்பட்டது. அதனால் பாஜக அலுவலகம் அமைந்திருந்த வைத்தியராமன் தெருவே போர்க்களமாக காட்சி தந்தது மறக்க முடியாதது. அன்று கருணாநிதி கேட்ட கேள்விக்கு ஏதோ ஒரு வகையில் அதாவது ராமரைத்தான் இனி பொறியியல் படிப்பு மாணவர்கள் படித்தாக வேண்டும் என இப்போது ம.பி. பாஜக அரசு பதில் சொல்லி இருக்கிறது.