ஓகி புயல் முன்னெச்சரிக்கை குளறுபடி பற்றி நாடாளுமன்றத்தில் மத்திய அரசை விளாசிய எம்பிக்கள்
இயற்கை சீற்றத்திலிருந்து உயிர்கள் பலியாவதை தடுக்க கண்காணிப்பு அமைப்பை நிறுவ வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.
டெல்லி: நாடாளுமன்ற விவாதத்தின் போது இயற்கை சீற்றத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் மீனவர்களுக்காக பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த எம்பிக்கள் கட்சி பாகுபாடின்றி குரல் கொடுத்தனர்.
மக்களவையில் இயற்கை சீற்றம் குறித்த விவாதத்தின் போது, ஒகி புயலில் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் பெருமளவு பாதிப்பை உண்டு செய்துள்ளதாக தமிழக எம்.பி. சுதர்சனம் மற்றும் கேரள எம்.பி வேணுகோபால் ஆகியோர் எடுத்துரைத்தனர். கன்னியாகுமரியிலிருந்து கடலுக்கு சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்களின் நிலை தற்போது வரை என்ன ஆனது என்று தெரியாத நிலையில் உள்ளதாக அவையில் தெரிவிக்கப்பட்டது.
கேரளா மற்றும் கன்னியாகுமரியில் கடலோர மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல ஆயிரம் குடும்பங்கள் சோகத்தில் முழ்கியுள்ளது. இயற்கை சீற்றத்திற்காக யாரையும் குற்றம் சொல்ல முடியாது என்றாலும், முன்னேச்சரிக்கை வழங்க வேண்டிய சில அதிகாரிகளின் தவறுகளால் பல உயிர்கள் பலியாகி விட்டதாக எம்.பிக்கள் தெரிவித்தனர்.
நாட்டில் உள்ள அனைத்து சம்பந்தப்பட்ட அமைப்புகளும் ஒன்றிணைந்து இயற்கை சீற்றங்களை தடுக்க பாடுபட வேண்டும். இனி ஒரு மீனவனின் உயிர் கூட போகக்கூடாது, அதற்கு அரசு முறையான கண்காணிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும். பாதிக்கப்பட்ட கேரள மற்றும் தமிழக பகுதிகளுக்கு போதிய நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும் என்றும் அவையில் வலியுறுத்தப்பட்டது.
இந்த விவாதத்தில், காங்கிரஸ், அதிமுக, கம்யூனிஸ்ட், சிவசேனா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் கட்சி பாகுபாட்டை மறந்து ஒன்றாக இணைந்து குரல் கொடுத்தனர்.