மும்பையை நெருங்கும் புனே தலித் போராட்டம்... 100 பேர் கைது!
பீமா கோரேகான் யுத்த வெற்றி கொண்டாட்டத்தின் 200வது ஆண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்க சென்ற போது தலித்கள் தாக்கப்பட்டு, அவர்கள் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
மும்பை : மும்பையின் சாலைகளில் வாகனங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சாலை மற்றும் ரயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
200 ஆண்டுகளுக்கு முந்தைய பீமா கோரேகான் யுத்த வெற்றியைக் கொண்டாட எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவா அமைப்புகள் தாக்குதல் நடத்தியதில் புனேவில் தலித் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் தலித் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையொட்டி மும்பை சாலைகளிலும், ரயில் வழித்தடத்தை மறித்தும் தலித்துகள் போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் போக்குவரத்து சில மணி நேரங்கள் பாதிக்கப்பட்டது, மேலும் இந்த போராட்டத்தின் போது தீக்குளிக்க முயன்ற ஒருவரை கலவர தடுப்பு போலீசார் தடுத்து நிறுத்தினர்.
மும்பையில் அரங்கேறிய கலவரம் குறித்து நீதி விசாரணைக்கு முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

முதல்வர் விசாரணைக்கு உத்தரவு
மஹாராஷ்டிரா ஒரு முற்போக்கான மாநிலம் என்றும் ஜாதி அடிப்படையிலான வன்முறையில் நம்பிக்கை இல்லை என்றும் ஃபட்நாவிஸ் கூறியுள்ளார். இன்று அரங்கேறியுள்ள கலவரத்திற்கு யார் காரணம் என்று பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்றார்.

மும்பையிலும் பாதிப்பு
தலித் அமைப்பினரின் திடீர் போராட்டத்தால் மும்பையின் கிழக்கு எக்ஸ்பிரஸ் வேயில் காலை முதலே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிற்பகலுக்குப் பின்னரே அது சீரானது. குர்லா வஷி இடையேயான மத்திய ரயில்வேயின் புறநகர் சேவையும் பாதிக்கப்பட்டது.
இன்றைய போராட்டத்தின் தொடர்ச்சியாக 100 பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். செம்பூரில் அனுமதியின் அதிக அளவில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் பெருங்கூட்டமாக திரண்டதற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை போலீஸ் எச்சரிக்கை
சமூக வலைதளங்களில் யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம், என்றும் கலவரம் தொடர்பாக காவல்துறையினரின் கருத்துகளைத் தவிர வேறு எதையும் பதிவிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே அம்பேத்கரின கொள்ளுப்பேரனான பிரகாஷ் அம்பேத்கர் நாளை மும்பையில் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மும்பையை தொற்றிக் கொண்ட பதற்றம்
ஆங்கிலேயர்களுடன் இணைந்து பீமா கோரேகான் என்ற இடத்தில் பேஷ்வா பிராமணர் படையுடன் கி.பி.1818-ம் ஆண்டு மிகப் பெரிய யுத்தத்தை நடத்தினர். இந்த யுத்தத்தில் 25,000 பேஷ்வா பிராமணர் படை கொல்லப்பட்டனர். 500 மகர் படையினர் வீரமரணமடைந்தனர்.
இதை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ம் தேதி வீர திவாஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி நேற்று மதியம் புனேவில் நடந்த பேரணியின் போது பலர் தாக்கப்பட்டதோடு, வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் 40 வயத தலித் ஒருவரும் உயிரிழந்ததோடு பலர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து புனேவைத் தொடர்ந்து மும்பையிலும் பற்றமான சூழல் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications