இந்தியாவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பிரதான பங்கு வகிக்கும் 'மியான்மர்'
டெல்லி: இந்தியா மேற்கொள்ளப்போகும் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் நடவடிக்கையில் மியான்மர் பிரதான பங்கு வகிக்கும் என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஸ்ஸாமில் ஆதிவாசிகளை போடோ தீவிரவாதிகள் அமைப்பான என்.எஃப்.டி.பி (எஸ்) படுகொலை செய்வதற்கான சதித் திட்டம் தீட்டப்பட்டது மியான்மரில்தான்.. அங்கு பதுங்கியிருந்த போடோ தீவிரவாதிகள்தான் அஸ்ஸாம் கிராமங்களுக்குள் நுழைந்து கோரப்படுகொலையை நிகழ்த்தியிருக்கின்றனர்.
இத்தகைய படுகொலையை நிகழ்த்திய போடோ தீவிரவாதிகள் மட்டுமல்ல.. லஷ்கர் இ தயிபா அமைப்பும் கூட மியான்மரில் முகாம் அமைத்திருக்கிறது. இது இந்தியாவுக்கும் மட்டும் சிக்கலானது அல்ல. மியான்மருக்கும் கூடத்தான்...
பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் மியான்மருடனான உறவு என்பது இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். மியான்மரில் ரோங்கியா முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறைக்கு பழிவாங்குவதற்காக 2013ஆம் ஆண்டில் மியான்மரில் லஷ்கர் இயக்கம் கால்பதித்தது. தற்போது ரோங்கியா முஸ்லிம்களின் பாதுகாவலான லஷ்கர் அங்கு உருவெடுத்திருக்கிறது.
மியான்மரில் செயல்படும் லஷ்கர் அமைப்புக்கு சவூதியில் இருந்து செயல்படும் தீவிரவாத குழுக்கள் நிதி உதவி செய்கின்றன. இந்த நிதிதான் மியான்மரில் லஷ்கர் நடத்தும் யுத்தத்துக்கே அடிப்படை. அதுமட்டுமல்ல உலகின் பிற பகுதிகளில் இருந்தும் தமது ஆதரவாளர்கள் மூலம் லஷ்கர் இயக்கம் நன்கொடை திரட்டுகிறது.
இந்த இயக்கத்துக்கான ஆயுதங்கள் கடந்த 2 ஆண்டுகாலமாக தாய்லாந்தில் இருந்து பெருமளவில் வந்து சேருகிறது. தாய்லாந்தில் லஷ்கர் அமைப்புக்கான ஆயுத விநியோக கிளையும் இயங்கி வருகிறது.
மியான்மரைப் பொறுத்தவரையில் ரோங்கியா முஸ்லிம்களின் பொருளாதார நிலைமைதான் லஷ்கருக்கு ஆதாயமான ஒன்று. உள்ளூர்வாசிகளுடனான முஸ்லிம்களின் மோதலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது லஷ்கர் அமைப்பு.
அதேபோல் மியான்மர்- இந்திய எல்லையில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பும் செயல்பட்டு வருகிறது. மியான்மர் எல்லையை ஒட்டிய கோக்ஸ் பஜார் மற்றும் டெக்னாஃப் பகுதிகளில் ஜெய்ஷ் இ முகமது இயங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அமைப்பும் ரோங்கியா முஸ்லிம்களிடத்தில் ஊடுருவியிருக்கிறது.
இந்த இரு அமைப்புகள் இணைந்தும் கூட டிஃபா இ முஸல்மான் அரகன் பர்மா மாநாடு என்ற புதிய அமைப்பையும் உருவாக்கியிருக்கின்றன.
இந்த அமைப்புகள் அல்லாமல் உல்ஃபா மற்றும் என்.எஃப்.டி.பி. (எஸ்) ஆகியவையும் மியான்மரில் பதுங்கி உள்ளன என்று பல்வேறு உளவுத் துறை தகவல்கள் தெரிவித்திருக்கின்றன. இந்த இயக்கங்கள், மியான்மரிலும் வங்கதேசத்திலும் ஜேஎம்பி தீவிரவாத இயக்கத்தின் ஆதரவுடன் முகாம்கள் அமைத்துள்ளன.
இத்தனை அமைப்புகளின் நோக்கங்களும் வெவ்வேறாக இருந்தாலும் இவை அனைத்துக்கும் இலக்காக இருப்பது இந்தியா என்பதால் இந்த ஒற்றைப்புள்ளியில் இணைந்து நிற்கின்றன. இதனால்தான் இந்த அமைப்புகள் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் அமைதியே திரும்பிவிடக் கூடாது என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றன.
மியான்மரில் ரோங்கியா முஸ்லிம்கள் தாக்கப்பட்ட பின்னர் அவர்களில் பலர் இந்தியாவுக்குள் ஊடுருவினர். இவர்களில் பெரும்பாலானோர் உணவு, வேலைவாய்ப்பு என அடைக்கலம் தேடி வந்தவர்கள் பலர். இப்படி அடைக்கலமாக வந்து குடியேறியவர்கள் ஹைதராபாத்தில்தான் அதிகம் இருக்கின்றனர். இப்போது இவர்களில் சிலர் மீண்டும் மியான்மர் திரும்பவே விரும்புகின்றனர். அவர்களால் இந்திய வாழ்க்கை முறையை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை என்பதுதான் இதற்கு காரணம்.
வங்கதேச முஸ்லிம்களின் குடியேற்றத்தைத் தொடர்ந்து ரோங்கியா முஸ்லிம்களின் குடியேற்றப் பிரச்சனையை பெரிய அளவில் இந்தியா எதிர்கொள்ள நேரிடும். ரோங்கியா முஸ்லிம்கள் இந்தியா முழுவதும் குடியேறி இருக்கின்றனர். ஜம்முவில் இவர்களுக்கு தனியே ஒரு அகதி முகாம் அமைக்கப்பட்டிருக்கிறது.
இப்படி பெரும் எண்ணிக்கையில் ரோங்கியா முஸ்லிம்கள் இந்தியாவுக்குள் ஊடுருவியிருப்பதை தீவிரவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இந்தியாவின் அமைதியை சீர்குலைக்கவே முயற்சிப்பார்கள். இந்த முயற்சியின் முதல் கட்டம்தான் புத்த கயா குண்டுவெடிப்பாகும். இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியது சிமி அமைப்பாக இருப்பினும் ரோங்கியா முஸ்லிம்களின் நம்பிக்கையை வென்றெடுத்திருக்கிறது சிமி.
அதேபோல் புர்த்வான் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஹைதராபாத்தில் ரோங்கியா முஸ்லிமான காலித் கைது செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு மியான்மரில் உள்ள லஷ்கர் இயக்கம் பயிற்சி கொடுத்து இந்தியாவுக்குள் அனுப்பி வைத்திருக்கிறது.
இப்படியான நிலையில் இந்தியாவைப் பொறுத்தவரையில் தீவிரவாதிகளை எதிர்கொள்ள வங்கதேசம், மியான்மரின் ஆதரவு அவசியமாக இருக்கிறது. அண்மையில் கூட மியான்மர் மற்றும் வங்கதேசம் இந்த விவகாரத்தில் உதவ வேண்டும் என்று இந்தியா கேட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு இரண்டு நாடுகளும் சாதகமான பதிலைத் தந்திருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனால் இனிவரும் காலத்தில் இந்தியா, வங்கதேசம் மற்றும் மியான்மர் இணைந்து பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.