முதல் முறையாக மகாராஜா இல்லாமல் மைசூர் தசரா கொண்டாட்டம்!
மைசூர்: உலக புகழ் பெற்ற மைசூர் தசரா பண்டிகையின் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றன.
'மைசூர் தசரா எஷ்டொந்து சுந்தரா' என்பது கன்னட மொழி பேசும் மக்களிடம் புழங்கிவரும் சொலவடை. மைசூர் தசரா என்ன ஒரு அழகானது என்பது அதன் தமிழ் பொருள். அந்த ஒற்றைச்சொல் தசரா கொண்டாட்டத்தின் அழகை வர்ணிக்க போதுமானதாக இருக்கலாம்.
அமாவாசை முடிந்து வளர்பிறை ஆரம்பிப்பதில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக, தமிழகத்தில் நேற்று விஜயதசமி கொண்டாடப்பட்ட நிலையில், கர்நாடகாவில் இன்றுதான் தசரா நிறைவுறுகிறது. இன்றுதான் மைசூரிலும் விஜயதசமி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
அப்போதைய மைசூர் மகாராஜா ஜெயசாமராஜேந்திர உடையார் வம்சத்தினர் 1974ம் ஆண்டு முதல் மைசூரில் தசராவை நடத்தி வருகிறார்கள். மன்னர் முறை ஒழிக்கப்பட்ட பிறகும், மைசூர் ராஜா வாரிசுகளுக்கு தசரா விழாவின்போது மாநில அரசு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளது. ராஜா காலத்து தர்பார் நடத்தி காண்பிக்கப்படும். ஆனால் மன்னர் வம்சத்தின் கடைசி வாரிசு ஸ்ரீகண்ட தத்த உடையார் சில மாதங்களுக்கு முன்பு இறந்து போனதால், இம்முறை அரச வாள், மன்னருக்குரிய மரியாதையை ஏற்றது.
விழாவின் உச்ச நிகழ்வான அம்பிகையின் யானை சவாரி இன்று மாலை நடக்கிறது. 750 கிலோ எடை கொண்ட சாமுண்டி அம்பிகையின் அம்பாரியை அர்ஜுனா என்ற பெயர் கொண்ட யானை சுமந்து வரும். அம்மனுக்கு மாநில முதல்வர் சித்தராமையா சிறப்பு பூஜைகள் செய்ய உள்ளார்.