அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய மோடிக்கு எதிராக 'ஒழிக' கோஷம்!
லக்னோ: லக்னோவிலுள்ள பிமாராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றியபோது, அவருக்கு எதிராக 'ஒழிக' கோஷம் எழுந்துள்ளது.
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் தலித் மாணவர், ரோகித் வெமுலா தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், பாஜக பிரமுகர் அழுத்தம் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இதுபோன்ற ஒரு கோஷம் பிரதமருக்கு எதிராக எழுந்துள்ளது.
லக்னோவிலுள்ள பீமாராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில், இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார். அவர் உரையை தொடங்கியபோது, 'நரேந்திர மோடி ஒழிக' என்று நான்கைந்து பேர் எழுந்து நின்று கோஷம்போட்டனர்.
பாதுகாப்பு வீரர்கள் அவர்களை வெளியே கொண்டு சென்றனர். இருப்பினும், மோடி உரையாற்றுவதை நிறுத்தவில்லை.
இதனிடையே, தனது லோக்சபா தொகுதியான வாரணாசியில் ஒரே மேடையில் 8,000 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி நிவாரணம் வழங்கும் மிகப்பெரிய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
இந்த அரசு ஏழைகள், தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கான அரசு, இவர்களுக்கு நல்லது செய்ய முயற்சி செய்வோம். ஏழைகளின் நலன்களுக்கான கடமை உணர்வு கொண்டது இந்த அரசு, இவர்கள் வாழ்க்கை நலன்களுக்காக சீரான முயற்சிகளை இந்த அரசு முயற்சி செய்து வருகிறது.
சில வேளைகளில் ஒட்டு மொத்த உலகமும் எனக்கு எதிராக இருப்பதாக தோன்றுகிறது. காலையிலிருந்து அனைத்து மூலைகளிலிருந்தும் என் மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது. மோடி தன்னுடைய பாதையிலிருந்து விலகி சர்ச்சைகளுக்குள் சிக்க வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்.
ஏழைகள் மற்றும் நலிவுற்றவர்களுக்கு உதவுவதே எனது தாரக மந்திரம். அதனால்தான் இந்த விமர்சனங்களினால் நான் பாதிக்கப்படுவதில்லை. மாற்றுத் திறனாளிகளுக்கு கடவுள் கொடுத்த சிறப்பு ஆற்றல்களை மக்கள் பார்க்க வேண்டுமே தவிர அவர்களின் இயலாமையை அல்ல.
மாற்றுத் திறனாளிகளுக்கான ‘சுகம்ய பாரத் அபியான்' திட்டத்தை தொடங்கவுள்ளது. அரசு அலுவலகங்களில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக இந்தத் திட்டம் கொண்டு வரப்படுகிறது. அவர்களின் நலன்களுக்காக விதிமுறைகளில் ஏதாவது மாற்றம் தேவையென்றாலும் செய்யப்படும்.