திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமில்லை... சுப்ரீம் கோர்ட் புது உத்தரவு
திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிப்பரப்புவது கட்டாயமில்லை என்று சுப்ரீம் கோர்ட் புதிதாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
டெல்லி: திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் புதியதொரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் திரைப்படக் காட்சிகளை ஒளிப்பரப்புவதற்கு முன்பு தேசியக் கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆணையிட்டது. அப்போது திரையில் தேசியக்கொடி காட்டப்பட வேண்டும் என்றும் தேசியக் கீதம் ஒளிபரப்பப்படும்போது போது மக்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இதிலிருந்து விலக்கும் அளிக்கப்பட்டது. தேசிய கீதம் இசைப்பது தொடர்பான வழிமுறைகளை அமைச்சரவை குழு உருவாக்கும் வரை இந்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் நேற்று மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவில் அமைச்சரவை குழுவை அமைத்து வழிமுறைகளை உருவாக்க எப்படியும் 6 மாதங்களாகும் என்பதால் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு கூறுகையில் 1971-ஆம் ஆண்டு தேசிய கொடி, சின்னங்கள் அவமதிப்பு தடுப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு வழிமுறைகளை வகுக்கும் வரை தேசிய கீதம் கட்டாயம் என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அப்போது நீதிபதி கூறுகையில், திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமில்லை என்றும் தேசிய கீதத்தை எங்கெல்லாம் ஒளிபரப்பலாம் என்பதை மத்திய அரசு வரையறுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அமைத்துள்ள குழு தேசிய கீதம் தொடர்பாக முடிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.