அட... நரேந்திர மோடிக்கு ஆதரவாக பேசும் மத்திய அமைச்சர் பிரபுல் படேல்
டெல்லி: குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு ஆதரவாக தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான பிரபுல் படேல் கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அளித்த பேட்டியில், குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிதான் 2002ஆம் ஆண்டு குஜராத் வன்முறைக்கு பொறுப்பு எனக் கூறியிருந்தார்.
நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி டைம்ஸ் நவ் செய்தியாளர் அர்னாப் கோஸ்வாமி கேள்வி கேட்டபோதும், மோடிதான் குஜராத் கலவரத்துக்குப் பொறுப்பு என மீண்டும் மீண்டும் ராகுல் கூறினார். ராகுலின் இந்த கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான பிரபுல் படேல், யாருடைய பேட்டி குறித்தும் நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
எந்த ஒரு பிரச்சனைக்குமே இறுதித் தீர்வாக இருப்பது நீதித்துறைதான். அரசியலுக்கும் மேலானது நீதித்துறைதான். அப்படிப்பட்ட நீதித்துறை அளிக்கும் ஒரு தீர்ப்பை நாம் மதித்தாக வேண்டும். அதை கேள்விக்குள்ளாக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.
காங்கிரஸின் கூட்டணி கட்சியான தேசியவாத கட்சியின் மூத்த தலைவரான பிரபுல்படேல், குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.