படையெடுக்கும் மக்கள்… வங்கிகளுக்கு பாதுகாப்பளிக்க உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
பழைய நோட்டுக்களை மாற்ற வங்கிகள், அஞ்சலகங்களுக்கு மக்கள் படையெடுத்து வருவதால் அந்த இடங்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பெங்களூரூ: பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற மக்கள் அலைமோதும் வங்கிகள், அஞ்சலகங்கள், ஏடிஎம்களுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளது.
கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாததாக்கி 8ம் தேதி பிரதமர் மோடி அறிவிப்பு செய்தார். அன்றைய தினத்தில் இருந்து மக்கள் கையில் இருக்கும் பணத்தை செலவு செய்ய முடியாமலும், அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமலும் அவதிப்பட்டனர்.
இதனிடையே, வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் பழைய ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுக்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. நேற்றில் இருந்து பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றும் பணி வங்கிகளில் தொடங்கியுள்ளது.
அடிப்படை தேவைகளுக்குக் கூட கையில் பணம் இல்லாததால் பழைய நோட்டுக்களை மாற்ற நேற்றில் இருந்து மக்கள் வங்கி மற்றும் அஞ்சலகங்களின் வாசல்களில் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். இன்று முதல் ஏடிஎம் மூலமாகவும் பணத்தை பெற முடியும் என்பதால் அங்கேயும் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில், வங்கிகள், அஞ்சலகங்கள், ஏடிஎம் மையங்களில் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த இடங்களில் அதிகமாக மக்கள் கூடுவதால், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்கவும், சுமூகமான முறையில் பணப்பரிவர்த்தனை நடைபெறவும் கூடுதல் போலீசாரை பணியில் ஈடுபடுத்த உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.
ஏற்கனவே, பாதுகாப்பு பணியில் போலீசார் இருந்தாலும், தற்போது கூடுதலாக ஈடுபடுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய நோட்டுக்களை மாற்ற வங்கிகளில் கூட்டம் அதிகம் கூடுவதால், பெங்களூரில் உள்ள பெரும்பாலான வங்கிகள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு கூடுதல் பாதுகாப்பு அளிக்க கேட்டுக் கொண்டனர் என்று கூடுதல் ஆணையர் ஹரிசேகரன் தெரிவித்துள்ளார். மேலும், வங்கிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வரும் 20ம் தேதி வரை கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.