ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை நடத்த சி.பி.ஐ. புதிய இயக்குனருக்கு உச்சநீதிமன்றம் அனுமதி
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை நடத்துவதற்கு சி.பி.ஐ. புதிய இயக்குனருக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகின்றது.
சி.பி.ஐ.யின் முன்னாள் இயக்குனர் ரஞ்சித் சின்ஹா கடந்த 2-ந் தேதி அப்பதவியில் இருந்து ஓய்வு பெற்றதையடுத்து, புதிய இயக்குனராக அனில் குமார் சின்ஹா நியமிக்கப்பட்டார்.
ரஞ்சித் சின்ஹா தமது பதவி காலத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் குற்றவாளிகளை பலமுறை சந்தித்துப் பேசியதை சுட்டிக் காட்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஸ்பெக்ட்ரம் வழக்கின் விசாரணையில் இருந்து சிபிஐ இயக்குனர் ஒதுங்கி இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் புதிய இயக்குனராக அனில் குமார் சின்ஹா பொறுப்பேற்ற நிலையில், ஸ்பெக்ட்ரம் வழக்கின் விசாரணையை அவர் நடத்த அனுமதியளிக்க வேண்டும் என சி.பி.ஐ. வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கோரிக்கையை ஏற்று ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான துறை ரீதியான விசாரணை மற்றும் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணை ஆகியவற்றுக்கு அவர் பொறுப்பேற்றுக்கொள்ள தலைமை நீதிபதி எச்.எல்.தத்து அனுமதியளித்தார்.