ஜனாதிபதி பதவியைக் கைப்பற்ற பாஜக தீவிரம்... துணை ஜனாதிபதி பதவிக்கும் குறி
அடுத்த ஜனாதிபதி நமது சாய்ஸ் ஆக இருக்க வேண்டும் என்று மத்தியில் ஆளும் பாஜக விரும்புவதால் அந்தப் பதவியை இலக்கு வைத்து வியூகங்கள் அமைத்துள்ளது. அதே போல துணை ஜனாதிபதி பதவியையும் பெற்றுவிட பாஜக மேலிடம் திட
டெல்லி: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பதவிகளை பாஜக கைப்பற்ற அதிரடி வியூகங்கள் வகுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் பாஜகவின், ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை வரும் 20ம் தேதி அறிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால், புதிய ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை மாதம் நடைபெறுகிறது.
அதற்கான வேட்பு மனுதாக்கல் நேற்று தொடங்கியுள்ளது. இதுவரை 6 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், ஆளும் பாஜக அரசு சார்பாக, இதுவரை ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற விவரம் அறிவிக்கப்படவில்லை.
அனைத்து தரப்பின் ஆதரவை பெற்ற ஒரு வேட்பாளரை நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெற பாஜக முயற்சித்து வருகிறது.
அதேசமயம், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரே வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளன. இதனால், நாளுக்கு நாள் ஜனாதிபதி வேட்பாளர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தபடி உள்ளது.
பாஜக மூவர் குழு
இந்நிலையில், பாஜக சார்பாக, 3 பேர் அடங்கிய ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, இறுதி முடிவை தெரிவிக்க உள்ளது.
விரைவில் வேட்பாளர் அறிவிப்பு
அதன் அடிப்படையில், ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வரும் 20ம் தேதி வெளியிட உள்ளது.
23ம் தேதி மனுதாக்கல்
வேட்பாளர் பெயர் அறிவித்து, எழும் விமர்சனங்களைப் பொறுத்தே வேட்புமனுத்தாக்கல் நடைபெறும் என்று தெரிகிறது. பாஜக வேட்பாளர் இம்மாதம் 23ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார் என்றும் கூறப்படுகிறது.
ரேஸில் 5 பேர்
இதுவரையிலும், முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன், உத்தரப்பிரதேச ஆளுநர் ராம் நாயக் உள்ளிட்ட 5 பேரின் பெயர்கள் பரிசீலனை பட்டியலில் உள்ளதாகவும், யாரை தீர்மானிப்பது என்பது எதிர்க்கட்சிகளை ஆலோசித்த பிறகே தெரியவரும் எனவும் பாஜக வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
பிராமின் - தலித் வியூகம்
ஜனாதிபதியாக பிராமின் வகுப்பிலிருந்து ஒருவரையும், துணை ஜனாதிபதியாக தலித் வகுப்பில் இருந்தும் ஒருவரையும் கொண்டுவர பாஜக திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
து.ஜனாதிபதி பதவிக்கும் குறி
மேலும், துணை ஜனாதிபதி பதவி ஆகஸ்ட் மாதம் காலியாக உள்ளது. இதற்கு, மத்திய அமைச்சர் கெலோட் பெயரை பரிந்துரைக்க, பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.