வாக்குப்பதிவு எந்திரங்களை முழுமையாக நம்புகிறோம்... டிஆர்எஸ் கட்சித் தலைவர் பேட்டி!
வாக்குப்பதிவு எந்திரங்களின் உண்மைத்தன்மை குறித்து தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் எம்எல்சி பல்லா ராஜேஸ்வர ரெட்டி கூறி இருக்கும் கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி நடப்பதாக எதிர்க்கட்சிகள் புகார்களை அடுக்கி வருகின்றன. வாக்குப்பதிவு எந்திரங்கள் கடத்தப்படுவதாகவும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பின. இதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்தநிலையில், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் எம்எல்சி பல்லா ராஜேஸ்வர ரெட்டி வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதான நம்பகத்தன்மை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில்," வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது எங்களுக்கும் சந்தேகம் இருந்தது.
ஆனால், தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் எங்களது சந்தேகங்களை தீர்த்து விட்டது. அதன்பிறகு, நாங்கள் சமரசம் ஆனோம். வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.
நாங்கள் சில தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம். சிலவற்றில் தோல்வி அடைந்துள்ளோம். எங்களுக்கு திருப்திகரமாக உள்ளது. எனவே, தேர்தல் முடிவு சாதகமாக அமைந்தாலும், பாதகமாக அமைந்தாலும் அதனை ஏற்றுக் கொள்வோம். அதுதான் மக்களின் தேவையும் கூட," என்று கூறி இருக்கிறார்.
தெலுங்கானா ராஷ்ட்ரிய கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான சந்திரசேகர ராவ் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் எதிர்க்கட்சித் தலைவர்களை அண்மையில் சந்தித்தார். பாஜகவுக்கு எதிராக நிலைப்பாடுடைய எதிர்க்கட்சிகளை வளைப்பதற்காக, அவர் பாஜகவின் தூதுவராக இந்த சந்திப்பை நிகழ்த்தி வருவதாக பரபரப்பு செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், சந்திரசேகர ராவ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், எம்எல்சியாக பதவி வகித்து வரும் பல்லா ராஜேஸ்வர ரெட்டியின் கருத்து தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி பாஜகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பது உறுதியாகி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
தேர்தலுக்கு பின் பாஜகவுக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைக்காவிட்டால், சந்திரசேகர ராவ் மூலமாக எதிர்க் கட்சிகளை வளைப்பதற்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.