ஜனாதிபதி, உள்துறை அமைச்சரை ஸ்டாலின் சந்திப்பார்... ஆனால் உறுதியாகவில்லை: டி.கே.எஸ்.இளங்கோவன்
தமிழக பிரச்சனைகள் குறித்து குடியரசுத் தலைவர் மற்றும் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச ஸ்டாலின் திட்டம் வைத்துள்ளார் என்று கூறியுள்ள டிகேஎஸ் இளங்கோவன், அவரது டெல்லி பயணம் உறுதியாகவில்லை என்று கூறியுள்ளார
டெல்லி: சசிகலா முதல்வராக பதவியேற்கும் விவகாரத்தில் அதிமுகவுக்கும் ஆளுநர் அலுவலகத்துக்கும் இடையே முரண்பாடு உள்ளது என்று திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ். இளங்கோவன் கூறியுள்ளார். தமிழக பிரச்சனைகள் குறித்து குடியரசுத் தலைவர் மற்றும் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச ஸ்டாலின் திட்டம் வைத்துள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழக அரசியல் வானிலையில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பதவியேற்றார். 2 மாதங்கள் ஆட்சி செய்த நிலையில் சசிகலாவை சட்டசபை குழு தலைவராக அதிமுக எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்துள்ளனர். இதனையடுத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஓ.பன்னீர் செல்வம். சசிகலா முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆளுநர் மும்பைக்கு சென்றுவிட்டதால் சசிகலா பதவியேற்பு தள்ளிப் போகிறது. இந்த நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இன்று டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியானது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், ஒருகட்சியின் பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் சட்டசபை குழுவை தலைவரை தேர்வு செய்த பின்னர் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டியது ஆளுநரின் கடமை என்றார். அதே நேரத்தில் பதவியேற்பது எப்போது என்ற தேதியை முடிவு செய்வதில் ஆளுநருக்கும், ஆளுங்கட்சிக்கும் இடையே சிக்கல் நீடிக்கிறது என்றார்.
மேலும் பேசிய டிகேஎஸ் இளங்கோவன், தமிழக பிரச்சனைகள் குறித்து குடியரசுத் தலைவர் மற்றும் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச ஸ்டாலின் திட்டம் வைத்துள்ளார் ஆனால் அவர் எப்போது டெல்லி வருவார் என்பது பற்றி முடிவாகவில்லை என்றும் கூறியுள்ளார்.