அபாய சங்கிலிகளை நீக்கும் திட்டமே இல்லை: ரயில்வே நிர்வாகம்
டெல்லி: ரயில்களில் அபாயசங்கிலிகளை நீக்குவதற்கான திட்டமே இல்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரயில்களில் அவசர காலங்களில் நிறுத்துவதற்காக அபாய சங்கிலிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அபாய சங்கிலி பயன்பாட்டை நிறுத்துவது என ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
சரியான காரணம் இல்லாமல் அபாய சங்கிலிகள் மூலம் ரயில்கள் நிறுத்தப்படுவதால் சுமார் ரூ. 3 ஆயிரம் கோடி வரையில் தேவையற்ற செலவு ஏற்படுவதாகவும் இதனால் இம்முறை முடிவுக்கு வருகிறது எனவும் கூறப்பட்டிருந்தது.
இதற்கு மாற்றாக ரயில்வே மொபைல் எண் கொண்டுவர திட்டமிடப்பட்டு உள்ளது என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ரயில்களில் அபாய சங்கிலிகளை நீக்குவதற்கான எந்த ஒரு திட்டமும் கிடையாது என்று தற்போது ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பயணிகள் தவறாக பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு போதிய விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.