பெட்ரோலிய அமைச்சக ஆவண திருட்டு: எங்கள் அலுவலகங்களில் 'ரெய்டு' நடக்கவில்லை - ரிலையன்ஸ்
டெல்லி: மத்திய அமைச்சக ஆவண திருட்டு தொடர்பாக தங்கள் அலுவலங்களில் போலீசார் சோதனை எதுவும் நடத்தவில்லை என்று அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சக அலுவலகங்களில் இருந்து ஆவணங்கள் திருடப்பட்டு தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழும அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து ரிலையன்ஸ் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
மத்திய அரசின் ரகசிய ஆவணங்கள் திருட்டு வழக்கில் நாட்டில் உள்ள ரிலையன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான எந்த ஒரு அலுவலகங்களிலும் போலீசார் சோதனை நடத்தவில்லை. அவ்வாறு நடத்தினால் போலீசாருக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம்.
அதே வேளையில், ரிலையன்ஸ் மின்சக்தி அலுவலக ஊழியர் ஒருவரது பணியிடத்தில் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. ஆனால் அங்கு சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த ஊழியர் எந்த சந்தர்ப்ப சூழ்நிலையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார் என்பது பற்றி எதுவும் தெரியாது. எங்களது நிறுவனம் நெறிமுறைகளுக்கு உட்பட்டு தொழில் செய்து வருகிறது. எந்த நிலையிலும் சட்டவிரோத நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.