மார்ச் 1 முதல் கன்பார்ம் டிக்கெட்காரர்களின் பயணம் ரத்தானால், பணம் வாபஸ் இல்லை: ரயில்வே அதிரடி
நாக்பூர்: ரயில் டிக்கெட் கன்பார்ம் ஆனபோதும், ரயிலில் பயணம் செய்யாமல் பின்னர் பணத்தைக் கோருபவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தை வாபஸ் தர இயலாது என ரயில்வே நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.
அதேபோல், டிக்கெட் முன்பதிவு திட்டத்தின் கீழ் மார்ச் ஒன்றாம் தேதி முதல், குழுவாக டிக்கெட் முன்பதிவு செய்து விட்டு, அதில் குறைவானவர்களே பயணம் செய்தாலும் பணம் திரும்பித்தர முடியாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய ரயில்வேயின் மண்டல மூத்த வர்த்தகப்பிரிவு மேலாளர் டாக்டர் சுமந்த் தெய்யுகர் கூறியதாவது :-
மார்ச் 1ம் தேதி முதல்....
இந்த புதிய நடைமுறையை மார்ச் 1ம் தேதி முதல் அமல்படுத்தப் படுகிறது. அனைத்து ரயில்வே கோட்ட பொது மேலாளர்களுக்கும் இது குறித்த சுற்றறிக்கை பிப்ரவரி 21ம் தேதியே அனுப்பப்பட்டு விட்டது.
தரமுடியாது...
டிக்கெட்டை ரத்து செய்யாமல் பயணம் செய்யாதவர்களுக்கும், மொத்தமாக டிக்கெட் பு்க் செய்து விட்டு அவற்றில் பெரும்பாலபானவற்றை ரத்து செய்து விட்டு குறைந்த அளவிலான நபர்களே பயணம் செய்தாலும் ரத்து செய்யப்பட்ட டிக்கெட்களுக்கான பணம் திரும்பித்தர மாட்டாது என கணினிமயமாக்கப்பட்ட பணம் திருப்பித் தரும் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரயில் ரத்தானால் பணம் வாபஸ்...
அதே சமயம், முன்பதிவு செய்து விட்டு ஆர்.ஏ.சி.,யில் குறைந்த வசதிகளுடன் பயணம் செய்ய நேர்ந்தாலோ அல்லது ஏசி பெட்டியில் ஏசி வேலை செய்யாவிட்டாலும், ரயில்கள் வேறு வழியாக மாற்றி விடப்பட்டதால் பயணம் செய்ய முடியாமல் போனாலோ அல்லது பயணிக்க இருக்கை வசதி தரப்படாமல் போனாலோ அல்லது ரயில்கள் ரத்து செய்யப்பட்டாலோ அந்த பயணிகளுக்கு டிக்கெட்டிற்கான பணம் திரும்பித்தரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
சாப்ட்வேர் மாற்றம்...
மேலும், இது குறித்து ரயில்வேதுறை பொருளாதார துணை இயக்குனர் ரோஹித் குமார் கூறுகையில், ‘இந்த புதிய மாற்றம் குறித்து தகவல்களை பயணிகளுக்கு தெரிவிக்கும் பொருட்டு மத்திய ரயில்வே துணையின் தகவல் தரும் முறையின் சாப்ட்வேரில் மாற்றம் செய்யவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான வழிமுறைகள் அனைத்து பணியாளர்களுக்கும் உடனடியாக வழங்கப்பட்டுள்ளது' என்றார்.
தற்போதைய நடைமுறை....
தற்போது ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் டிக்கெட்டிற்கான பணத்தில் 50 சதவீதம் வரை திருப்பி தரும் முறை நடைமுறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.