கார்த்தி சிதம்பரத்துக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் கூடாது: சிறைத் துறைக்கு நீதிபதி உத்தரவு
கார்த்தி சிதம்பரத்துக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் எதையும் வழங்கக் கூடாது என்று திகார் சிறைத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
டெல்லி: திகார் சிறையில் 12 நாட்கள் அடைக்கப்படும் கார்த்தி சிதம்பரத்துக்கு எவ்வித சலுகையும் வழங்க கூடாது என்று சிறைத் துறைக்கு நீதிபதி சுனில் ராணா உத்தரவிட்டுள்ளார்.
ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது அன்னிய முதலீடுக்கான தடையில்லா சான்றிதழுக்கு ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திடம் ரூ10 லட்சம் கமிஷன் வாங்கியதாக அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் கடந்த 1-ஆம் தேதி லண்டனில் இருந்து சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது 4 முறை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
சுனில் ராணா முன்பு ஆஜர்
4-ஆவது முறையாக கொடுக்கப்பட்ட நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் அவர் இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்ற நீதிபதி சுனில் ராணா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிபிஐ அதிகாரிகள் , கார்த்தியை சிறையில் அடைக்க கோரிக்கை விடுத்தனர்.
கார்த்தி கோரிக்கை
அதை ஏற்ற நீதிபதி, கார்த்தி சிதம்பரத்தை திகார் சிறையில் 12 நாட்கள் அடைக்க உத்தரவிட்டார். அப்போது தனது தந்தை முன்னாள் மத்திய அமைச்சர் என்பதால் வெளியிலிருந்து உணவு கொண்டு வருவது உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார் கார்த்தி.
சலுகையும் கொடுக்கக் கூடாது
அதை ஏற்க மறுத்த நீதிபதி, கார்த்தி சிதம்பரத்துக்கு சிறப்பு சலுகைகள் ஏதும் கிடையாது. தந்தை முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தாலும் எவ்வித சலுகையும் கொடுக்க கூடாது.
தனி அறை இல்லை
மற்ற கைதியை போலவே கார்த்தியும் நடத்தப்பட வேண்டும். அவருக்கென தனி அறை ஒதுக்கக் கூடாது என்று நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.