'பி.கே.'வில் என் நாவலை காப்பியடித்துவிட்டார்கள்: ரூ.1 கோடி கேட்டு எழுத்தாளர் வழக்கு
டெல்லி: தனது நாவலில் இருந்து சில பகுதிகளை காப்பியிடித்து பி.கே. படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி நாவல் ஆசிரியர் கபில் இஸாபுரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஆமீர் கான் நடித்த பி.கே. படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. அதே சமயம் படத்தில் இந்து மதத்தினரின் நம்பிக்கையை கிண்டல் செய்துள்ளதாகக் கூறி வழக்குகள் தொடரப்பட்டன. மேலும் பி.கே. படத்திற்கு எதிராக பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதனால் படத்திற்கு இலவசமாக கூடுதல் விளம்பரம் தான் கிடைத்தது.
ஆவல்
சில இந்து அமைப்பினர் போராட்டம் நடத்த நடத்த படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்பதை பார்த்துவிடும் ஆவலில் பலர் தியேட்டருக்கு சென்றனர். இந்நிலையில் பி.கே.வுக்கு புதுப் பிரச்சனை கிளம்பியுள்ளது.
காப்பி
2013ம் ஆண்டு வெளியான தனது நாவலான ஃபரிஸ்தாவில் இருந்து சில பகுதிகளை காப்பியடித்து பி.கே. படத்தை எடுத்துள்ளதாகக் கூறி நாவல் ஆசிரியர் கபில் இஸாபுரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ரூ.1 கோடி
எனது நாவலை காப்பியடித்ததற்காக பி.கே. தயாரிப்பாளர்கள் எனக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மேலும் என் நாவலின் பெயரை படத்தில் போட வேண்டும் என்று கபில் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
நாவல்
கபிலின் நாவலில் சாமியார்களை கண்மூடித்தனமாக நம்புவதை விமர்சிப்பது, மதம் என்பது மனிதன் உருவாக்கியது என்பது உள்ளிட்டவை உள்ளன. இதை பி.கே. படத்தில் காப்பியடித்துள்ளதாக கபில் குற்றம் சாட்டியுள்ளார்.