சீனாவை அச்சுறுத்தும் அக்னி 5 ஏவுகணையின் இறுதிக்கட்ட சோதனை வெற்றி!
கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணையின் இறுதிக்கட்ட சோதனை இன்று ஒடிசாவில் நடத்தப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் வீலர் தீவில் நடத்தப்பட்ட அக்னி 5 ஏவுகணையின் இறுதிக்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த அக்னி 5 ஏவுகணை அண்டை நாடான சீனாவை அச்சுறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் அக்னி - 5 ஏவுகணையின் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்ததாக இந்தியா ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் தெரிவித்தது. இதையடுத்து இந்த ஏவுகணை ஒடிசா மாநிலம் வீலர் தீவிலிருந்து இன்று கடைசி முறையாக சோதனை செய்யப்பட்டது.
இந்த அக்னி 5 ஏவுகணை 5,500 முதல் 5,800 கி.மீ.,க்கும் அதிகமான தொலைவில் இருக்கும் எதிரிகளின் இலக்கை தாக்கி துவம்சம் செய்யும் திறன் கொண்டது.முக்கியமாக வடக்கு சீனா வரை சென்று தாக்கும் திறனுடன் இந்த அக்னி 5 ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
50 ஆயிரம் கிலோ எடையுடன் இந்த அதிநவீன அக்னி 5 ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை 17 மீட்டர் நீளம் கொண்டது. கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த அக்னி 5 ஏவுகணை கடந்த 3 ஆண்டுகளில் 3 முறை நடத்தப்பட்டுள்ளது.
தற்போது நடத்தப்பட்ட இந்த 4வது சோதனை வெற்றி பெற்றுள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றதன் மூலம் அதிக சக்திவாய்ந்த ஏவுகணைகளை வைத்துள்ள அமெரிக்க, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது.
8000 முதல் 10,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட அக்னி 6 ஏவுகணைகள் விரைவில் உருவாக்கப்படும் என இந்திய ராணுவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.