ரூபாய் அச்சடிக்கும் மையத்திலிருந்து ஷூவில் பணம் கடத்திய அதிகாரி கைது
ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் மையத்திலிருந்து பணத்தை திருடிய அதிகாரி கைது செய்யப்பட்டார்
Recommended Video
போபால்: மத்திய பிரதேசத்தில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் மையத்திலிருந்து தினமும் பணத்தை திருடிக்கொண்டிருந்த அதிகாரியை துணை ராணுவத்தினர் கையும் களவுமாக கைது செய்தனர்
மத்திய பிரதேசத்தின் திவாஸ் மாவட்டத்தில் 185 ஏக்கர் பரப்பளவில் புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. பலத்த பாதுகாப்பின் கீழ் செயல்பட்டு வரும் இந்த மையத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் தனது ஷூவில் வைத்து 20 ஆயிரம் ரூபாயை திருட முயன்றார். அப்போது அவரை மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் கைது செய்தனர்.
விசாரணையில் அவர் ரூபாய் நோட்டுகளை சரி பார்க்கும் பிரிவில் துணை கட்டுப்பாட்டு அதிகாரியாக பணிபுரிந்து வரும் மனோகர் வர்மா என்பதும், இவர் கடந்த பல வருடங்களாக இதே போல தினமும் பணத்தை திருடிச் சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருக்கும் சிசிடிவி காமிராவில் வர்மா திருடிய காட்சிகள் பதிவாகியுள்ளதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். அவரது அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 26,09,000 ரூபாயும், வீட்டில் 64,50,000 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை அவர் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை இவ்வாறு திருடி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்துள்ள போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரைப் போல மற்ற அதிகாரிகளும் இவ்வாறு பணத்தை திருடுகிறார்களா என்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.