குல்பி ஐஸ் விற்கும் பாக்சிங் வீரர் தினேஷ்... 17 தங்கப்பதக்கம், அர்ஜுனா விருதுக்காரரின் அவலநிலை!
பிவானி : இந்தியாவிற்காக 17 தங்கப்பதக்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் என்று வாங்கிக் குவித்து மரியாதை ஏற்படுத்தித் தந்த பாக்சிங் வீரர் தினேஷ் குடும்பத்தினர் பட்ட கடனை அடைப்பதற்காக குல்பி ஐஸ் விற்கும் புகைப்படம் ஊடக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஹரியானாவைச் சேர்ந்த பாக்சிங் வீரர் தினேஷ். இந்தியாவின் கொடியை உலக விளையாட்டு அரங்கில் பறக்க விட்ட விளையாட்டு வீரர். ஆனால் தற்போது பிவானி மாவட்டத் தெருக்களில் தள்ளுவண்டியில் ஐஸ் விற்று வருகிறார். இந்தியாவில் நடந்த தேசிய குத்துச்சண்டை போட்டிகள், சர்வதேச அளவில் நடந்த ஜூனியர் குத்துச்சண்டை போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய நாட்டு கொடியுடன் கம்பீர நடை போட்டவர்.
17 தங்கப்பதக்கம், ஒரு வெள்ளிப்பதக்கம், 5 வெண்கலப்பதக்கம் என்று பதக்கங்களையும் வாங்கி குவித்தவர். இதற்காக இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கி கவுரவிக்கப்படும் உயரிய விருதான அர்ஜுனா விருதையும் குடியரசுத் தலைவரிடம் பெற்றுள்ளார் தினேஷ்குமார். தினேஷ் நல்ல நிலையை அடைந்து விட்டார் இனி அவருடைய வாழ்வில் இறங்குமுகமே இல்லை என்று நினைத்தவர்களின் தலையில் இடியாய் வந்து விழுந்தது 2014ல் தினேஷிற்கு நடந்த விபத்து.
வாழ்க்கையை புரட்டிப் போட்ட விபத்து
தினேஷ்குமார் சென்ற கார் லாரியுடன் மோதியதில் அவர் படுகாயமடைந்தார். அதோடு அவருடைய பாக்ஸிங் சகாப்தம் முடிந்துவிட்டதாக நினைத்து அவரை மறந்துவிட்டது விளையாட்டுத் துறை. மகனின் மருத்துவ செலவுக்காக லட்சக்கணக்கில் கடன் பட்டு தினேஷை உயிருடன் மீட்டார் அவருடைய தந்தை. விபத்திற்கு முன்னரே தினேஷின் பாக்ஸிங் பயிற்சி, போட்டிகளில் பங்கேற்க வெளிநாட்டிற்கு செல்ல என பல லட்சங்களை கடனாக வாங்கியும் இருந்திருக்கிறார்.
உதவி செய்யாத அரசு
அரசியல்வாதிகளுக்கு தாங்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதியே மறந்து போகும் நிலையில் இந்தியாவிற்காக பதக்கம் வாங்கிக் கொடுத்த தினேஷை மட்டும் நினைவில் வைத்துக் கொள்வார்களா. தினேஷிற்கு அரசுப் பணியோ எந்த வித நிதியுதவியோ கூட செய்யவில்லை. இதனால் குடும்பத்தினரின் கடனை அடைப்பதற்காக வீதியில் இறங்கி குல்பி ஐஸ் விற்று வருகிறார் தினேஷ்.
குல்பி விற்கும் அவலநிலை
தினேஷ் குல்பி என்று அச்சடிக்கப்பட்டுள்ள தள்ளுவண்டியில் குல்பி ஐஸ்களை எடுத்துச் சென்று பிவானி மாவட்ட வீதிகளில் விற்று கிடைக்கும் வருமானத்தில் கடனை அடைத்து வருகிறார். தற்போதும் தான் முழு உடல்தகுதியுடன் இருப்பதாகக் கூறும் தினேஷ் ஜூனியர் அளவிலான குழந்தைகளுக்கு குத்துச்சண்டை பயிற்சி அளித்து பதக்கம் வாங்கும் அளவுக்கு தயார்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். அரசு தனக்கு வாய்ப்பு கொடுத்தால் தேசிய அளவில் பதக்கம் பெறும் வகையில் பல வீரர்களைத் தயார்படுத்துவேன் என்றும் தனக்கு அரசுப் பணி ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அரசுப்பணி வேண்டும்
தினேஷ் குமாரின் பயிற்சியாளர் பகவான் சிங் ''குறுகிய காலத்தில் வேகமாக வளர்ந்த மிகச்சிறந்த வீரர் தினேஷ் குமார். தினேஷிற்கு அரசு நிரந்தரமான வேலையை வழங்கினால் அவர் தனது பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.
கவனம் செலுத்துமா
விளையாட்டுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் அயல்நாடுகள் சிறந்த மரியாதையை வழங்குகின்றன. இந்தியாவில் விளையாட்டு வீரர்கள் சொந்த முயற்சியில் மட்டுமே ஸ்தாபிக்க முடிகிறது, அப்படி இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பவர்களை எளிதில் கடந்து போய்விடும் நிலை மாற வேண்டும். சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ள தினேஷ்குமாரின் புகைப்படத்தை பார்த்த பின்னராவது அவருக்கு உரிய உதவியை செய்ய அரசு முன்வருமா?