ஓராண்டை நிறைவு செய்யும் ஜிஎஸ்டி : கூட்டாட்சி தத்துவத்திற்கான உதாரணம்... பிரதமர் பெருமிதம்
சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டமான ஜிஎஸ்டி அமலுக்கு வந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி : சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டமான ஜிஎஸ்டி அமலுக்கு வந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது. இந்த வரி இந்திய கூட்டாச்சி தத்துவத்திற்கான உதாரணம் என்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த விழாவில் தொடங்கி வைக்கப்பட்டு, நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
நாடு முழுவதும் ஒரே விதமான வரி விதிப்பை அமல் செய்யும் இந்த திட்டத்திற்கு பலத்த ஆதரவும், எதிர்ப்பும் ஒரு சேர எழுந்தது. இந்த சட்டம் அமல்படுத்தபட்டது முதல், நாடு முழுவதும் இருந்த 12க்கும் அதிகமான வரி விதிப்பு சட்டங்கள் முடிவுக்கு வந்தன.
வரி மாற்றம்
ஜி.எஸ்.டி.,யில் 3, 5, 12,18 மற்றும்,28 சதவீதம் என, ஐந்து விதமான வரிகள் உள்ளன. பொருட்களுக்குத் தக்க இந்த வரிவிதிப்பு சதவிகிதம் மாறுபடுகிறது. இதில், சில பொருட்கள், முன்பு இருந்ததை விட, அதிக வரி விதிப்புக்கு உள்ளானதாக கூறப்பட்டது.இதையடுத்து, 200க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான வரி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டது. பல பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டது.தற்போது, 12 மற்றும் 18 % வரியை, ஒரே வரியாக ஒருங்கிணைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.
முதன்மைத் தீர்வு ஆணையம்
இந்த வரி விதிப்பு முறை இந்தியா முழுவதும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தாலும், சிறு குறு வியாபாரிகளுக்கும் நிறுவனங்களும் பல்வேறு சிக்கலை ஏற்படுத்தியது. தற்போது, அவை படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக மாநில அரசு பிரதிநிதிகளை கொண்ட, முதன்மை தீர்வு ஆணையம் அமைக்க, மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.இதுபோல, ஜி.எஸ்.டி வரியும் வலிமையான வரி கட்டமைப்பாக உருவாக்கப்பட்டு வருகிறது.
ஓராண்டு நிறைவு விழா
பாஜக அரசின் மிகப்பெரிய சாதனையாக ஜிஎஸ்டி வரி விதிப்பும் கருதப்படுகிறது. நாட்டின் மிகப்பெரிய வரி சீர்த்திருத்தச் சட்டம் என்று இதனை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்த வரி விதிப்பு கொண்டு வரப்பட்ட தினம் ஜிஎஸ்டி தினமாக கொண்டாடப்படுகிறது. அதற்காக இன்று மாலை டெல்லியில் ஓராண்டு நிறைவு விழா கொண்டாட ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அம்பேத்கர் பவனில் நடக்கும் இந்த விழாவிற்கு மத்திய அமைச்சர் ப்யூஷ் கோயல் தலைமையேற்க, பல்வேறு வரித்துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
|
பிரதமர் மோடி ட்வீட்
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஜி எஸ் டி வரி விதிப்பு முறையால், உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும், தொழில்முனைவோருக்கு எளிமையாக அமைந்துள்ளதாகவும், சிறு குறு தொழிலதிபர்களுக்கு பலனளித்துள்ளது. அதுபோல, இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்திற்கு உதாரணமாக விளங்குகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.